கஞ்சா வியாபாரிகளை காப்பாற்றிய எலி: போலீஸுக்கு பல்பு
சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 11 கிலோவை எலி தின்றதால், குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை போலீசாரால் நிரூபிக்க முடியாமல் போனது. இதனால் இரு குற்றவாளிகளை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இதை மறுக்கும் தமிழக போலீசார், கஞ்சா வேட்டை எனக் கூறி கஞ்சா கடத்தலையும், விற்பனையையும் போலீசார் தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு, சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில், கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணையின்போது போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது அதில் 11 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி, போலீசாரால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி, கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.