கடுமையான விலைவாசி உயர்வு - எகிறும் குடும்பச் செலவால் திணறும் பொதுமக்கள்.
பருவநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக விளைச்சல் குறைந்தபடியால் காய் கறி உள்ளிட்ட அனைத்து உணவுப்பண்டங்களின் விலையும் நாடுமுழுவதும் தாறுமாறாக ஏறியுள்ளது. மக்கள் தினம்தோறும் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, தக்காளி, வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட உணவுப்பண்டங்கள் விலை 8 முதல் 10 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் மாதசம்பளதாரர்களும், தினக்கூலிகள், நடுத்தரக் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் தமிழக அரசு வழங்கி வருகிறது. மாநில அரசின் இம்முயற்சி உணவுப்பொருட்கள் விலைக்குறைப்பில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே எதார்த்த நிலையாக உள்ளது.
நாடு முழுவதும் நிலவும் விலைவாசி உயர்வு பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் மக்களிடம் எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்துவரும் இப்பிரச்சினை இன்னும் ஓரிரு மாதங்கள் நீடிக்கும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கக்கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். மேலும் ரஷ்யா, உக்ரைன் போரையடுத்து ரஸ்யாவிலிருந்து குரூட் ஆயில் இறக்குமதி செய்ததின் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு 80 ஆயிரம் கோடை வரை லாபம் கிடைத்துள்ளது. இதன் பயன் எதுவும் மக்களுக்கு சென்றடையவில்லை. சர்வதேச சந்தையில் விலை ஏறும்போது பெட்ரோல், டீசல் விலையினை உயர்த்திக்கொள்ளும் எண்ணெய் நிறுவனங்கள் விலை குறையும்போது அதை மக்களுக்கு வழங்குவதில்லை. எனவே மத்திய அரசு நாட்டு மக்கள் நலன்கருதி பெட்ரோல், டீசல் விலையை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.