தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி மனு!
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் வகுப்பிலுள்ள 68 சாதியினர் 2014 முதல் DNT சாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகின்றனர். ஐந்தாண்டுகால தொடர் போராட்டத்தின் பலனாக எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2019 பாராளுமன்ற தேர்தலின்போது ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்துவிட்டு DNC/DNT என இரட்டைச்சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில அரசின் இரட்டை நிலைப்பாட்டால் மத்திய அரசின் உதவியை பெறமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஒற்றைச்சான்றிதழ் கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த சட்டமன்ற தேற்தலுக்கு முன்பாக துணைமுதல்வராக இருந்த ஓபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நிச்சயம் ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக அறிவித்துவிட்டு திடீரென வன்னியர் சாதிக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அதிர்ச்சி அளித்தனர்.
இதனையடுத்து அச்சட்டத்திற்கு எதிராக நீண்ட நெடிய சட்டப்போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இறுதியாக அச்சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் உச்சநீதிமன்ற விசாரணையில் அத்தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்திற்கு முடிவுகட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்டு மாதம் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மதுரையில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது.
இதற்கிடையே, மக்கள்தொகை கணக்கெடுப்பு, உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் அடுத்தடுத்து ஏற்பட்டதின் விளைவாக ஒற்றைச்சான்றிதழ் கோரிக்கையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் சீர்மரபினர் நலச்சங்கம் மீண்டும் இக்கோரிக்கையை கையில் எடுத்துள்ளது. இதற்காக நேற்று தலைமைச்செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் மற்றும் அமைச்சறை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் தமிழக முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்னும் ஒருசில வாரங்களில் தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
நேற்றைய நிகழ்வில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் பொ.இராமராஜ் அவர்களும், சீர்மரபின நலச்சங்க நிர்வாகிகள் தவமணி அம்மாள், தேனி அன்ழகன். பள்ளிக்கரனை ஜெயராமன், ராசிராம் இராமையன், திண்டுக்கல் கோபால் ஜி, மாயாண்டி பாண்டியன், நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.