சந்திராயன்-3 நிலவைநோக்கி பயணத்தை தொடங்கியது - இஸ்ரோ தகவல்
சந்திரயான்-3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை விட்டு இன்று நிலவை நோக்கி பயணித்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 விண்கலம் எல்.வி.எம் ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஒட்டியுள்ள பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பபட்டுள்ளது.
179 கிலோ மீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் விண்கலம் செலுத்தப்பட்ட 16 நிமிடத்தில் புவி சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதன்பின், Orbit Raising Manueuver எனப்படும் புவி வட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் பணிகள் நடைபெற்று 5 கட்டமாக சந்திரயான்-3 புவியின் சுற்றுப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் நேற்று நள்ளிரவுடன் புவி சுற்று வட்டப் பாதையை நிறைவு செய்து, நிலவை நோக்கி பயணத்தை இன்று தொடங்கியுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ, தனது டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்(ISTRAC) வளாகத்தில் இருந்து பெரிஜி-ஃபயரிங் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதையடுத்து விண்கலம் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதைக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், விண்கலம் நிலவை அடைந்ததும், ஆகஸ்ட் 5-ம் தேதி சந்திர சுற்றுப்பாதைக்குள் நுழையும் (Lunar-Orbit Insertion- LOI) செய்யப்படும்” என்றும் கூறியுள்ளது.