கணிக்க முடியாத நீதிமன்ற தீர்ப்புகள் - நம்பிக்கையிழக்கும் பொதுமக்கள்
இந்திய நீதிமன்றங்களுக்கென்று ஒரு தனித்துவமான போக்கு உள்ளதாக சொல்கின்றனர் நீதித்துறையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றவர்கள். வழக்கு விசாரணைகளின் போது நீதிபதிகள் மடக்கி மடக்கி கேட்கும் கேள்விகள், வைக்கும் விமர்சனங்கள் எதுவும் தீர்ப்பில் பிரதிபளிக்காமல் சென்ற சம்பவங்கள் பல உண்டு. அதிலும் குறிப்பாக இடஒதுக்கீடு வழக்குகளில் ஆரம்பகாலம் தொட்டே பல நேரங்களில் பலவாறான தீர்ப்புகளை நீதிமன்றன்ங்கள் வழங்கியுள்ளன. இடஒதுக்கீடை எதிர்த்து முதல் முதலில் வழக்குத் தொடர்ந்த செண்பகம் துரைராஜ், மருத்துவப்படிப்பிற்கே விண்ணப்பிக்காமல் இடஒதுக்கீடு முறையால் தனக்கு மருத்தும் படிக்கும் வாய்ப்பு பறிபோனதாக தொடுத்த வழக்கில் மனுதாரர் உண்மையாகவே விண்ணப்பித்தாரா என்பதைக்கூட ஆராயமல் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.
அந்தக்காலம் தொடங்கி தற்போது அரசியல் கட்சிகளில் பிளவு ஏற்பட்டு இருபிரிவுகளும் கட்சியையும், சின்னத்தையும் உரிமைகோருவது வரை ஒரே மாதிரியான வழக்குகளில் வெவ்வேறான தீர்ப்புகளை வழங்கி தீர்ப்புகளை கணிக்கமுடியாத நிலைக்கு இட்டுச்செல்கின்றன. அதில் ஒன்றுதான் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிப்பு வழக்கு. கர்நாடக மாநிலத்தில் பேசிய பேச்சிற்கு குஜராத் மாநிலத்தில் வழக்கு தொடர்ந்து, பின் வழக்கு தொடுத்தவரே விசாரணைக்கு தடைவாங்கி, மீண்டும் விசாரக்க மனுதாரர் வேண்டுகோள் வைத்த ஒருசில மாதங்களில் தீர்ப்பையும் வழங்கி நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி தொடுத்த மனுவை தள்ளுபடி செய்து, அதற்கடுத்த நிலையிலுள்ள மாவட்ட நீதிமன்றமும், குஜராத் உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பில் வழக்கிற்கே சம்பந்தமில்லாமல் பல வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி நாட்டு மக்களையே அதிர்ச்சியடையச் செய்தார்.
இந்நிலையில் தற்போது ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை இன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் ராகுல் காந்தி எம்பி பதவி பரிப்பிற்கும், தண்டனைக்கும் தடை விதித்த நீதிபதிகள், ஒரு அரசியல்வாதி எப்படி நடந்துகொள்ள வேண்டுமென சூரத் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு படிக்கவே சுவாரஸ்யமாக இருந்ததாகவும், குஜராத்திலிருந்து வரும் சில நீதிமன்ற தீர்ப்புகள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதாக கிண்டல் செய்துள்ளனர்.
நீதிமன்றங்களில் நிலவும் இதுபோன்ற போக்கு சாமானியனுக்கு எப்படி நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை பிறக்கும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.