மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞருக்கு தலைவர்கள் வாழ்த்து!
ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் முதலமைச்சரே பங்கேற்று உரையாற்றி கட்சியினரை உற்சாகமூட்டி வருகிறார். இதற்கிடையே உட்கட்சித் தேர்தல்கள் முழுமையாக நிறைவுபெற்று தலைமைக்கழக நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர், இதன் நீட்சியாக பல்வேறு துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் பட்டியலும் தலைமையின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டு வருகின்றன.
வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் பத்து லட்சம் பேர் பங்கேற்கும் மாநாடு இளைஞரணி சார்பில் நடத்தப்படுமென்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் மற்றொரு வலிமைவாய்ந்த துணை அமைப்பான மாணவரணி சார்பில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனொருபகுதியாக கோவை தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக பொள்ளாச்சி, நஞ்சேகவுண்டன்புதூரைச் சேர்ந்த பெ.பூரணச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இளங்கலை பொறியியல் பட்டமும், சட்டத்துறையில் பட்டமும் பெற்றுள்ள பூர்ணச்சந்திரன் மாணவப்பருவத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
கோவை தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பூரணச்சந்திரனுக்கு கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெ.பூரணச்சந்திரனை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், மாணவரணி மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.