எளிய மக்களிடம் வங்கிகள் சுரண்டிய 36000 கோடி ரூபாய் - வெளியான அதிர்ச்சி தகவல்.
நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிய பிறகும், பெரும் அளவு மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர்களுக்கு சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, அவர்கள் கணக்கில் பணம் சேருவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ரூபாய் செலவிலும் அதிகபட்ச மதிப்பு இருக்க வேண்டும். நமது நாட்டு ஏழைகளுக்கு அதிகபட்ச அதிகாரம் அளிக்க வேண்டும். இந்த மக்களின் மத்தியில் அதிகபட்ச தொழில்நுட்பம் ஊடுருவ வேண்டும் என்று மக்கள் மீது மிகுந்த அக்கறையோடும், வாஞ்சையோடும் 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர், அதே ஆகஸ்ட் 28-ல் அனைவருக்கும் வங்கிக்கணக்கு "ஜன்தன் யோஜனா" என்ற திட்டத்தை அறிமுகம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, தீய சக்திகளிடமிருந்து ஏழைகளுக்கு சுதந்திரம் வழங்கும் இந்த நிகழ்வு, திருவிழாவாக கொண்டாட வேண்டிய தருணம் என்று பெருமிதமாகக் கூறி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதுதவிர பாஜக வினரும் மோடி அரசின் மகத்தான சாதனையாக இத்திட்டத்தை கூறிவந்தனர்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டதன் ஒரே ஆண்டில் 19 கோடியே 72 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 16 கோடியே 8 லட்சம் ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் 28 ஆயிரத்து 699 கோடியே 65 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 697 வங்கி தொடர்பாளர்கள் இதில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். ஒரே வாரத்தில் 1 கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 130 வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட கின்னஸ் சாதனை படைத்தது.
ஆனால் தற்போது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள தகவல் பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வங்கிக்கணக்கில் குறைந்தபட்சம் தொகையாக சிலநூறு ரூபாய்களைக்கூட வைத்துக்கொள்ள முடியாதவர்களிடமிருந்து வங்கிகள் 21000 கோடி ரூபாய் அபராதத் தொகையாக வைத்து கொள்ளையடித்துள்ளன. இத்தொகை பிரதமர் 8.5 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையில் பாதி. அதாவது 4 கோடி விவசாயிகளுக்கு வழங்கும் 6000 ரூபாய் தொகைக்கு ஈடானது.
இதுதவிர மாதம் 5 முறைக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்தியதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணக்கொள்ளை 8300 கோடி ரூபாய் .
வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதற்காக வசூலிக்கப்பட்ட தொகை 6250 கோடி ரூபாய்.
வங்கிகளின் இந்த சேவைக்காக ஒருசில நூறுகோடிகளுக்கு பதிலாக 36,000 கோடி ரூபாய் வங்கிகள் கொள்ளையடித்துள்ளன என்பது பிரதமரின் ஜன்தன் யோஜ்னா திட்டத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.