முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றுக - அமைச்சரிடம் வலியுறுத்தல்.
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில், இன்று (24.08.2023) காலை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. ராஜகண்ணப்பன் அவர்களை சந்தித்தனர். இதுகுறித்து சீர்மரபினர் நல சங்கம் செயல் தலைவர் பெ.இராமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபதாவது,
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபின சமூகங்கள் டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் கேட்டு 2014 முதல் போராடி வருகின்றன. ஐந்தாண்டுகால தொடர் போராட்டத்தின் விளைவாக, 2019 இல் போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய அன்றைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, ஒற்றைச்சான்றிழ் வாக்குறுதியை ஏற்பதாக பேச்சுவார்த்தையில் அறிவித்துவிட்டு, அரசாணை வெளியிடும்போது டிஎன்டி/டிஎன்சி என இரட்டை சான்றிதழ் வழங்கி உத்தரவிட்டது. இரட்டை சான்றிதழ் வழங்குவதால் எந்தப்பயனுமில்லை என்பதால் ஒற்றைச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை 68 சமூகங்ஙள் நடத்தி வந்தது.
இதற்கிடையே, 2021-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, ஒற்றைச்சான்றிதழ் அளிப்பதாக வாக்குறுதியளித்து, பின்பு ஏமாற்றிய அதிமுகவை எதிர்த்து டிஎன்டி சமூகங்கள் தேர்தல் களத்தில் போராடியதால், இப்பிரச்சினை பெரிய அளவில் கவனம் பெற்றது.
அப்போது, ஆலங்குளம் தொகுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய இன்றைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார்.
திமுக அரசு பொறுப்பேற்று 27 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், முதல்வர் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனையடுத்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகிவரும் சீர்மரபினர் நலச்சங்கம் முதற்கட்டமாக இன்று (24.08.2023) காலை தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவரும், சீர்மரபினர் நலச்சங்க செயல் தலைவர் பெ.இராமராஜ் தலைமையிலான குழுவினர், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோரை சந்தித்து முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மனு அளித்தனர்.
மேலும், இக்குழுவில் பள்ளிகரனை ஜெயராமன், (பிரமலை கள்ளர் சமூகம்), திரு. ராசிராமன், (முத்தரையர் சமூகம்), திரு. வேதாச்சலம்,
(வேட்டுவ கவுண்டர் - வேட்டைகாரர் நாயக்கர் சமூகம்), திரு. பம்பல் இன்பராஜ்
(செட்டில்மென்ட் கள்ளர்), திரு. Dr. தனுஷ்கோடி, (வலையர் சமூகம்), திரு. தேக்கமலை, (போயர் சமூகம், திரு. ஜாக்குவநாதன்,
(மறவர் சமூகம்), திரு. KPM.ராஜா, (அம்பலகாரர் சமூகம்), திரு. கோபால் ஜீ, (அம்பலகாரர் சமூகம்), திரு. தட்சிணாமூர்த்தி,
(ஊராளி கவுண்டர் சமூகம்), திரு. கேசவபிரசாத்
(ஊராளி கவுண்டர் சமூகம்) உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.