சிஏஜி அறிக்கை டோல்கேட் ஊழலை அம்பலப்படுத்துகிறது - நாளை முதல் சுங்கக்கட்டணம் உயர்வு.
சமீபத்தில் வெளியான மத்திய தணிக்கைக்குழு அறிக்கை (சிஏஜி) அறிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் பலநூறுகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறியிருந்த நிலையில், நாளை செப்'1 முதல் மீண்டும் கட்டண உயர்வதாக அறிவிப்பு வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதன்படி, தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்கிறது. கனரக வாகனங்கள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வானங்களுக்கான கட்டணங்கள் குறித்த முழு விபரங்கள் இதோ.
எலியார்பத்தி சுங்கச்சாவடி:
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எந்தெந்த சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு?
தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டண உயர்கிறது. திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் தினமும் 30,000 மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் கனரக லாரிகள் மதுரையில் இருந்து தூத்துக்குடி சாலை செல்வதும் தூத்துக்குடியில் இருந்து மதுரை வருவதாக இருந்து வருகிறது.
கட்டணம் எவ்வளவு?
இந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசு விலைப்பட்டியல் குறித்தும் அட்டவணை வெளியிட்டிருந்தது அதில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.290-லிருந்து 320 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர 440ல் இருந்து 480 ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
லாரி ஓட்டுனர்களுக்கு பெரும் இழப்பு:
இதனால் லாரி ஓட்டுனர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பாதிக்கு மேல் சுங்கச்சாவடிக்கு கட்டும் நிலை உருவாகியுள்ளது என்று லாரி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரையில் பண்ணியன் மற்றும் எலியாரப்பத்தி டோல்கேட் மட்டுமே மத்திய அரசின் விலை ஏற்றம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் கண்டனம்:
நாட்டிலுள்ள பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் பல அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பின்பும், நெடுஞ்சாலை அமைப்பதற்கான மொத்த செலவை விட பல மடங்கு கூடுதலாக வருவாய் ஈட்டிய பின்பும் அரசின் ஆசீர்வதத்தோடு இயங்கி வருவதற்கு பொதுமக்கள் கடும் கட்டணங்களை தெரிவித்துள்ளனர். பல சுங்கச்சாவடி நிறுவனங்கள் சாலையை முறையாக பராமரிக்காமலும், போதுமான வசதிகளை செய்யாமலும், அதிகாரிகள் துணையோடு ஏமாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான சிஏஜி அறிக்கையில், செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் நடைபெற்று வரும் முறைகேட்டுகளை அம்பலப்படுத்தியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இச்சுங்கச்சாவடியை கடந்த வாகனங்களில் 53% வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதாக கணக்கு காட்டியுள்ளது. இது அப்பட்டமான மோசடி என்பதற்கு ஆராய்ச்சிகள் ஏதும் தேவையில்லை. நாட்டிலுள்ள பிற சுங்கச்சாவடிகளில் 8% முதல் 10% வரை மட்டுமே வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இச்சுங்கச்சாவடி அருகே 1956-இல் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதை தான் கட்டியதாக 1996 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் உரிமை கொண்டாடி, சுங்கக்கட்டணம் வசூலிப்பதை சிஏஜி அம்பலப்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் சாம்பிள் (8%-9%) வகையில் தணிக்கை செய்யப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் மட்டும் 130 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி கூறியுள்ளது. இப்படி நெடுஞ்சாலை முழுக்க கொள்ளையர்களாக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளை மத்திய அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளபோது, கட்டணை உயர்வை அறிவித்துள்ளதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.