🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வழக்கம் போல் வந்த புரட்சிப்புயலும் - காணாமல் போன காளான்களும்....

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 224-வது வீரவணக்கநாள் இன்று நாடெங்கும் எழுச்சியோடு அனுசரிக்கப்பட்டது. அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாரிலும்,  நெல்லை, மதுரை, கரூர், திருப்பூர், கோவை, சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசியல் கட்சிகள் வரிசையில், சாதி மத எல்லைகள் கடந்து, வாக்கு அரசியல் கணக்குகளை பொருட்படுத்தாமல், வரலாற்று நாயகர்களுக்கு மரியாதை செலுத்தி, அவர்களின் தியாகத்தையும், புகழையும் மக்களிடம் எடுத்துரைத்து பெருமைசேர்க்கும் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வழக்கம்போல் முதல்நபராக, கட்சியினர் புடைசூழ கயத்தார் சென்று மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.


அதிமுக சார்பில் நிரந்தர நிலையாணை பிறப்பிக்கப்பட்டு கடம்பூர் சி.இராஜு, கே.டி.இராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களோடு வந்து கயத்தாரில் மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி க.பழனிச்சாமி அவர்கள் தனது X தளத்தில் நினைவுநாள் பதிவிட்டிருந்தார்.

அதில், ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் துணிவுடன் எதிர்த்து, ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக மாபெரும் குரலாக ஒலித்து, எதிரிப் படைகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்து, நம் நாடு விடுதலை அடைய வேண்டி இறுதிவரை போராடி, தன் உயிர்மூச்சு உள்ளவரை தாய் மண்ணை நேசித்து, தூக்குக் கயிற்றை பயமின்றி பரிசாக ஏற்றுக்கொண்ட வீரம் நிறைந்தவரான மாமன்னர் வீரபாண்டியகட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில் அவரின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் பாஜக மாநில தலைவர் கு.அண்ணாமலையும் தனது X தளப்பதிவில், ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல், தன்னுயிரை துச்சமெனக் கருதிப் போராடிய மாவீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நினைவு தினம் இன்று. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை ஏற்க மறுத்து, ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்துப் போராடி, இறுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு தூக்குமேடை கண்டவர். வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வணங்குகிறோம் என்று கூறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், இந்திய விடுதலைப் போரில் தன் வாழ்வைத் துச்சமென மதித்து , அன்னை பாரதத்தின் அடிமைத் தளையைத் தகர்த்தெறிய பாடுபட்டு, வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகம் வீண்போகாமல் காலந்தோறும் பிறை மதியென வளர்ந்து விடுதலை பெற உதவியதை நினைத்து, அந்தப் பெருமைமிக்க அடிச்சுவட்டில் நாம் அனைவரும் நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என்று அவர் நினைவு நாளான இன்று உறுதி ஏற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.


திமுக தரப்பில் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் என்ற முறையில் கீதாஜீவன் மட்டும் X தளத்தில் போஸ்டர் போட்டுள்ளார். அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களிலும் உள்ள சமூக வலைதளப்பக்கங்கள் அதற்கென நியமிக்கப்பட்ட அட்மின்கள் பொறுப்பாக உள்ளனர். பெருஞ்சாதி தலைவர்களுக்கெல்லாம் ஓடியோடி மரியாதை செய்யும் திமுகவும், அதன் தலைவர்களும் கட்டபொம்மனின் நினைவு நாளுக்கு ஒரு பதிவிடாமல் இருப்பது கம்பளத்தார் சமுதாய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

எனினும், அக்கட்சியின் புதூர் ஒன்றிய செயலாளர் எம்.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட கழகத்தினர் கயத்தாறிலூள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


சமுதாய அமைப்புகளின் சார்பில், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மற்றும் கட்சியினர் கயத்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது தொட்டிய நாயக்கர்களுக்கு டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் கேட்டு அக்கட்சியினர் முழக்கமிட்டனர். மேலும், முன்னாள் தலைமைச் செயலாளர் இராம மோகன்ராவ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் நாமக்கல் பழனிச்சாமி  ஆகியோர் கயத்தாறு நிகழ்வில் பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். 

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நினைவுநாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் தலைவர் ஆர்.வரதராஜன் சென்னையிலும், மாநில அவைத்தலைவர் பி.எஸ்.மணி, பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், பொருளாளர் பாண்டியன் உள்ளிட்டோர் மதுரையிலும் மற்றும் கயத்தாறு நிகழ்விலும் கலந்துகொண்டனர்.  ஈரோடு மாவட்டத்தின் சார்பில் சத்தியமங்கலம் பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மு.மாவட்ட தலைவர் பவுல்ராஜ், மோதூர் முனுசாமி, சுப்பிரமணியம், ரெங்கசாமி, விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், கரூரில் அமைந்துள்ள சிலைக்கு சத்தியமூர்த்தி தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள சிலைக்கு கவுன்சிலர் மாசிலமணி, தொழிலதிபர் கணேசன், தங்கராஜ் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில், கிண்டியிலுள்ள பாஞ்சை வேந்தன் சிலைக்கு இளைஞரணி தலைவர் நல்லுசாமி தலைமையில், செயலாளர் சூரையா, துணைத்தலைவர் நாராயணசாமி, ரவுண்ட் பில்டிங் முருகன், மண்டல பொறுப்பாளர்கள் செல்வராஜ், இராஜா, இராமர், தங்கவேல், ஈரநாகு, ஆறுமுகசாமி, இராதாரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்தனர்.


தவிர, கட்டபொம்மன் குளோபல் பவுண்டேசன் சார்பில் நிறுவனர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினரும், இன்ன பிற தோழமை அமைப்புகளின் நிர்வாகிகளும் கிண்டியில் அமைந்துள்ள சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் புதுவரவாக, திரைப்பட நடிகர் பப்லு, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் வீரவணக்கநாள் நிகழ்வில் பங்கேற்று மாவீரனுக்கு புகழஞ்சலி செலுத்தினர். 

தேர்தல் மழைக்கு முளைக்கும் காளான் அரசியல்வாதிகளின் கபட நாடகமின்றி, உண்மையான உணர்வாளர்களின் பங்கேற்போடு சிறப்பாக நினைவு கூறப்பட்டது பாஞ்சை பெருவேந்தனின் 224-வது நினைவுநாள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved