ராஜ்பவனின் நடைபெற்ற விழாவில் இராஜகம்பளத்தார் பங்கேற்பு!
ராஜ்பவன் விழாவில் இராஜகம்பளத்தார்!
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினமான நேற்று (01.11.2023) அந்நினைவுநாளைக் கொண்டாடும் வகையில் தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர். இதன் விவரம் வருமாறு,
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், சுதந்திரம் பெற்ற பிறகும் மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. 1956-ல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று 58 நாட்கள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். இதையடுத்து 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்டு நேற்றுடன் 67 ஆண்டுகள் கடந்துள்ளன. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்த ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் மேற்குவங்கம், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் உதயமான நாளை நாடுமுழுவதுமுள்ள கவர்னர் மாளிகை கொண்டாட மத்திய அரசு கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் தமிழக ஆளுநர் மாளிகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவில் தமிழகத்தில் வாழும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். இதில் துறை ரீதியான சாதனையாளர்கள் பலருக்கு பொன்னாடை அணிவித்து ஆளுநர் ஆர்.என்.இரவி கௌரவித்தார். முன்னதாக ஆளுநரும் அவரது துணைவியாரும் வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களின் இருக்கைக்கே சென்று வரவேற்றனர். ஆளுநரின் விழா சிறப்புரையை அடுத்து ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பையும் வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் உதயமான நாளைக்கொண்டாட தெலுங்கு அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் ஆர்.பெருமாள், மண்டல பொறுப்பாளர் சிவராமன், சட்ட ஆலோசகர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.