கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் விழாவில் தமிழக அமைச்சர்கள்!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் (03.01.2024) அன்று தமிழகம் முழுவதும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் மதுரையில் அமைச்சர்கள் கலந்துகொண்டு கட்டபொம்மனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் விவரம் வருமாறு,
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் கொண்டாட நிலையாணை பிறப்பிக்க தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்து உத்தரவு பெற்றுத்தருமாறு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரிடம் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கடந்த 31.12.2023-இல் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பிறந்தநாள் ஓருசில தினங்களுக்குள் வருவதால் அரசாணை பெறுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், அடுத்த ஆண்டு நிச்சயம் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் அவர்கள் மதுரை விழாவில் கலந்துகொள்ளுமாறு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் சென்ற வை.மலைராஜன், மகேஷ்வரன், தங்கப் பாண்டியன், வைகுந்த, விஜயராஜ் உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.
சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் அழைப்பை ஏற்று மதுரையில் கலந்துகொள்வதற்கு அமைச்சர் சம்மதம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாளை முன்னிட்டு 3-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க இருப்பதாக திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன்படி பிறந்தநாளான 3-ஆம் தேதி காலை 11 மணியளவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், தளபதி எம்.எல்.ஏ ஆகியோர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக விருதுநகரிலிருந்து மதுரை புறப்பட்ட அமைச்சரை வை.மலைராஜன், மகேஷ்வரன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, வைகுந்த், தங்கபாண்டியன், கவுன்சிலர் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான திமுக பிரமுகர்கள் கார்களில் அணிவகுத்து அழைத்து வந்தனர். மதுரை கட்டபொம்மன் சிலை அருகே த.வீ.க.பொ.பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் ஏராளனமானோர் அமைச்சர் பெருமக்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.