கனடாவில் வாழமுடியாமல் நாடு திரும்பும் இந்தியர்கள் அதிகரிப்பது ஏன்?
வாய்ப்புகளை தேடி அலையும் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்களின் விருப்ப நாடாக கனடா நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் தற்போது அந்த கனடா கனவு தகர்ந்து போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வளம் மிகுந்த பஞ்சாபின் கிராமப்புறங்களில் பயணித்தால் , அங்கு வெளிநாட்டு பயணங்களுக்கான விளம்பரங்களை அதிகம் பார்க்கலாம்.
அதன் வயல்வெளிகளில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்று உறுதியளிக்கும் நூற்றுக்கணக்கான விளம்பர பலகைகள் உயர்ந்து நிற்பதை பார்க்கலாம். மாடி வீட்டின் சுவர்கள் தோறும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் முகவர்களின் விளம்பரங்கள் ஆக்கிரமித்திருக்கும்.
பதிண்டா நகரின் தெருக்களில் பல முகவர்களும், அவர்களை தேடி வரும் இளைஞர்களின் வெளிநாட்டு கனவினை உடனடியாக சாத்தியப்படுத்துவதாக உறுதியளிப்பார்கள்.
இந்தியாவின் வடமேற்கு மாநிலமான இங்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெளிநாட்டுக் குடியேற்றத்தின் அலை வீசி வருகிறது. அதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கிய வீரர்கள் கனடாவுக்குச் செல்லும் பயணம் தொடங்கி, சுதந்திரத்திற்குப் பிறகு கிராமப்புற பஞ்சாபியர்களின் இங்கிலாந்து பயணம் வரை அடங்கும்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பால்கர், “அங்கு எல்லாமே விலை அதிகம். கல்லூரி முடித்த பிறகு, பிழைப்பிற்காக வாரத்திற்கு 50 மணிநேரம் நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக பல மாணவர்கள் தங்களது படிப்பை கைவிடுகின்றனர்” என்றார்.
தற்போது பால்கர் தனது பெரிய முற்றம் கொண்ட தனது பாரம்பரிய பஞ்சாபி வீட்டின் ஒரு சிறிய அறையில் எம்ப்ராய்டரி தொழிலை செய்து வருகிறார்.
கனடாவில் இருந்து பஞ்சாப் திரும்பிய சுமார் அரை டஜன் நபர்களிடம் பிபிசி பேசியது. அனைவருமே ஒரே மாதிரியான உணர்வுகளையே பகிர்ந்து கொண்டனர்.
அப்படி கனடாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்துள்ள இந்தியர்கள் பலரும் யூடியூபில் பகிர்ந்துள்ள வீடியோக்களில் ஒரே மாதிரியான தொனியை அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதை காணலாம்.
இதுகுறித்து சமீபத்தில் இந்தியா திரும்பிய நபர் ஒருவர், குடியேற்ற முகவர்களால் (Immigration Agent) சொல்லப்பட்ட கனடா வாழ்க்கை குறித்த தகவலும், டொராண்டோ மற்றும் வான்கூவரில் குடியேறியவர்களின் உண்மை நிலையும் அப்படியே மாறுபட்டதாக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலுள்ள இளைஞர்களின் விருப்பநாடுகளில் ஒன்றாக கனடா இருந்து வரும் நிலையில் வெளியாகியுள்ள இந்தச்செய்தியால் அவர்களின் கனவு பதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்து லல்லுனர் ஒருவர், வடமாநில இளைஞர்களின் நிலைவேறு, தமிழகத்திலிருந்து செல்லௌம் இளைஞர்களின் நிலை வேறு. வடமாநில இளைஞர்கள் பெரும்பான்மையினோர் கல்வி பின்புலமில்லாமல் தினக்கூலியாகவே செல்வதாகவும், இதேபோல் பின்தாங்கிய பலநாடுகளில் இருந்தும் வருபவர்கள் பாதிப்புகள் அதிகம் என்றும், ஆனால் இதற்கு நேர்மாறாக தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து செல்லும் இளைஞர்கள் பட்டதாரிகளாக மட்டுமே வேலைக்கு செல்கின்றனர் அல்லது உயர்கல்விக்காக சென்று அங்கேயே பணியில் அமர்ந்துவிடுவதால் எந்தவித பாதிப்பும் இவர்களை பாதிக்காது என்று தெரிவித்தனர்.