தமிழகத்தை மையம்கொள்ளும் போதைப்பொருள் - திமுக அரசைக்கண்டித்து போராட்டம்
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதை கண்டித்து எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் நேற்று அக்கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற மனித சங்கிலிப்போராட்டத்தில் அதிமுகவிலுள்ள கம்பளத்தார் சமுதாய முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக பதாகை ஏந்தியும், கோஷமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் கே.கே.கண்ணன், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் அ.காசிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சிவராஜ், தேவராஜ் மற்றும் பவுல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், கோவை மாவட்டத்தில் வி.என்.ரவி, சிவசாமி, சரவணக்குமார், புவனேஷ்வரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இதேபோல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் அதிமுக பிரமுகர்கள் ஆங்காங்கே நடைபெற்ற மனித சங்கிலிப்போராட்டத்தில் பங்கேற்று போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய ஸ்டாலின் அரசே பதவி விலகு, ஊழல் செய்யும் ஸ்டாலின் குடும்ப ஆட்சி தேவையில்லை, மாஃபியாவோடு தொடர்பில் உள்ள ஆளும் திமுக வை கண்டிக்கின்றோம், விடியா திமுகவே மாணவர்களின் வாழ்க்கையை அழிக்காதே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முழக்கமிட்டனர்.