மழைக்கு காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

பசிபிக் பெருங்கடலில் இயற்கையாக ஏற்படக்கூடிய காலநிலை மாற்றமே எல் நினோ, லாநினா என்று அழைக்கப்படுகிறது. இந்த எல் நினோ முடிவுக்கு வந்துள்ளதாக தனியார் வானிநிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். எல்நினோ மாற்றமானது உலகளாவியநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில், இதன் காலநிலை அளவு தற்போது முடிவுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் சராசரி வெப்பநிலை அளவு குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகரிப்பது எல் நினோ என்று அழைக்கப்படும். இதனால் அதீத மழை அதீத வெப்பம் ஆகியவை ஏற்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம், மழை ஆகியன எல்நினோ மாற்றத்தால் ஏற்பட்டது. அது இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.
எல் நினோ காரணமாக கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் நிரம்பவில்லை. 40 அடிக்கும் கீழே சரிந்தது. அணை நீர் திறப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து படிப்படியாக உயர்ந்து 65 அடி வரை எட்டியது. தற்போது குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதற்கிடையே பெங்களூர் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தைத்தை சரி செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை அங்குள்ள அரசு செய்துவந்தாலும், மக்களுக்கு போதுமான தண்ணீரை வழங்கமுடியவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது. இதேபோல் தமிழகம், கேரளா, கர்நாடக எல்லை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நோய்தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை மரங்கள் தற்போது வறட்சியையும் தாங்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எப்ரல் இரண்டாவது வாரத்திற்குள் மழைபெய்தால் மட்டுமே தென்னை மரங்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.
இந்தசூழலில், எல் நினோ முடிவுக்கு வந்துள்ளதாகவும், இந்த ஆண்டு மழையளவு போதுமான அளவில் இருக்கும், காவிரி நீர் பிரச்சினையும் தீரும் என்று பதிவிட்டுள்ளார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.