தியாகச்சுடர் தலைவர் வைகோ நலம்பெற வேண்டுகிறோம்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான திரு.வைகோ எம்.பி அவர்கள் நேற்று முன்தினம் (26.05.2024) கால் தடுமாறி விழுந்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப இராஜகம்பள சமுதாய தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் விவரம் லருமாறு,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அக்கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் (26.05.2024) திருநெல்வேலி வருகை தந்தார். அங்கு அவரது சகோதரர் வை.ரவிச்சந்திரன் இல்லத்தில் தங்கிவிட்டு அடுத்தநாள் திருமண விழாவில் கலந்துகொள்வதாக திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில்,எதிர்பாரா விதமாக அன்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நேற்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவ பரிசோதனைக்குப்பின் வைகோ அவர்களுக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்களின் இயக்கத் தீவிர கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் பூரணநலம் பெற்று வீடுதிரும்புவார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ள திரு.வைகோ அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வழக்கம்போல் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஆதாயமற்ற மக்கள் பணியைத் தொடரவேண்டி தமிழகத்தில் வாழும் 40 லட்சம் இராஜகம்பளத்தார் சார்பில் இயற்கையை வேண்டுவதாக இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, அதிமுக நிர்வாகி அ. காசிராஜன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

