இணைய உலகில் புதிய வரவு கூகிள் ஜெமினி!
உள்ளங்கை அளவில் உலகம் சுருங்கிவிட்டபடியால், கையடக்க கருவியான மொபைலிலேயே அனைத்திற்கும் விடை காணும் வழக்கம் UNIVERSAL HABIT ஆகி இருக்கிறது. எல்லாத்துக்கும் கூகுள் ஆண்டவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக வளரத் தொடங்கி இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இணையதள உலகில் புதிய வரவாக அறிமுகம் ஆகியிருக்கிறது கூகுள் ஜெமினி.... ARTIFICIAL INTELLIGENCE என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜெமினியின் சிறப்புகள் என்ன பார்க்கலாம்?
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதுவும் சாத்தியம் என்பது நிரூபித்துக் காட்டியுள்ளது AI எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். இதன்படி 2022 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் ஓபன்AI நிறுவனம், சாட் ஜிபிடியை அறிமுகப்படுத்தியது. இது தொழில்நுட்ப உலகையே ஒருபடி மேலே கொண்டு சென்றது என்று தான் சொல்ல வேண்டும். பயனாளர்கள் கேட்கும் கேள்விகளை உள்வாங்கி திறமையாக பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது சாட் ஜிபிடி. இதனால் இணைய உலகத்தை ஆளும் கூகுளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதன்பிறகு AI களத்தில் குதித்த கூகுள், கடந்த ஆண்டின் இறுதியில் ஜெமினி எனும் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தி AI ரேஸில் நாங்களும் இருக்கிறோம் என்று உலகிற்கு உணர்த்தியது. இருப்பினும், சாட் ஜிபிடி ஏற்படுத்திய தாக்கத்தை ஜெமினியால் ஏற்படுத்த முடியவில்லை. ஆகையால் ஜெமினியில் சில மாற்றங்கள் வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தற்போது புதிய அம்சங்களுடன் ஜெமினி AI இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தவறான பதிலையே கூகுள் ஜெமினி வழங்கியதால், அந்த தொழில்நுட்ப கோளாறு கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சையின் வேலைக்கும் கோளாறை ஏற்படுத்தியது. ஜெமினிக்காக பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவை கலைத்து விடும் அளவுக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஆனாலும், சுந்தர் பிச்சை மட்டும் மனம் தளரவில்லை. ஜெமினி ஹிட் அடிப்பதற்காக பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார். இந்த முறை அப்டேட்டில் சர்ச்சை வரக்கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்தப்பட்டது.
கூகுள் ASSISTANT-க்கு மாற்றாக உருவெடுத்தது ஜெமினி. மின்னஞ்சல்கள், இடுகைகள், அலாரம், டைமர், நினைவூட்டலை அமைப்பது என டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. கூகுள் ஜெமினியை மொபைலில் டவுன்லோடு செய்தவுடன் நமக்கு ஆரம்பத்திலேயே மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம் தமிழிலேயே ஜெமினியுடன் உரையாட முடியும். தரவுகளை தமிழில் கேட்டு பெற முடியும். தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூகுளின் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 9 மொழிகளில் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

