பூமியில் வெப்பம் அதிகரிக்க மனிதர்களே காரணமா?- காலநிலை மாற்றம்-1

நாம் வாழும் இந்த பூமிக்கு வெப்பத்தை அளிப்பது சூரியன். ஆனால், சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்பம் முழுவதுமாக பூமியில் தங்கி விடுவதில்லை. பூமி அதில் ஒரு பங்கை மறுபடி விண்வெளிக்கு திருப்பி அனுப்புகிறது. இப்படி வெப்பத்தை தொடர்ந்து திருப்பி அனுப்பிக்கொண்டே இருந்தால், பூமியில் வெப்பம் தங்காது. அதனால், பூமி குளிர்ந்து, விறைத்து, எல்லாம் பனியாக மாறிவிடும்.
அப்படி நடக்காமல் தடுப்பது, நமது வானத்தில் அல்லது வளி மண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களாகும். இவற்றை greenhouse gasses பச்சை வீட்டு வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இந்த வாயுக்கள், பூமி திருப்பி அனுப்பும் வெப்பத்தை சிறை பிடித்து, அதில் ஒரு பங்கை மறுபடி பூமிக்கே அனுப்புகின்றன. இதனால்தான் பூமி எப்போதும் ஓரளவுக்கு சூடாகவே இருக்கிறது.
ஆனால், ஏதேனும் ஒரு காரணத்தால், வெப்பத்தை சிறை பிடிக்கும் இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் என்ன நடக்கும் ? பூமி திருப்பி அனுப்பும் வெப்பத்தில் பெரும் பங்கு சிறை பிடிக்கப்பட்டு, மறுபடி பூமிக்கே வந்து சேரும். அதுதான் இங்கே பிரச்சினை. மனிதனின் சில நடவடிக்கைகளால், வெப்பத்தை சிறை பிடிக்கும் இந்த பச்சை வீட்டு வாயுக்களின் அளவு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக பூமியின் வெப்பம் விண்வெளிக்கு வெளியேறாமல், இங்கேயே சிறை பிடிக்கப்படுகிறது. அந்த வெப்பம் பூமியை என்னவெல்லாம் செய்யும் ? என்ன மாற்றங்களை உருவாக்கும் ? என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் ? ... அதுதான் “புவி வெப்பமடைதல்” அல்லது “காலநிலை மாற்றம்” என்கிற பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
இப்படி பூமியை வெப்பமாக்கும் வாயுக்களில் CO2 எனப்படும் கார்பன்டை ஆக்ஸைட்டு வாயுவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இது தவிர, மீதேன், நைட்ரஸ் ஒக்சைட் மற்றும் க்ளோரோ (F)ப்ளோரோ வாயுக்களும் அடங்குகின்றன.
சரி, இந்த வாயுக்களின் அளவு அதிகரிப்பதற்கு மனிதன் எப்படி காரணம் ஆகிறான்?
பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடக்கம் உலக வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மாற்றம் உருவாகியது. அதை "கைத்தொழில் புரட்சி" என்று அழைக்கிறார்கள். கைகளால் அதிக வேலைகளை செய்துகொண்டிருந்த மனிதன், கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரங்களின் பாவனைக்கு மாறுகிறான். இங்கிலாந்தில் தொடங்கி, ஐரோப்பா, அமெரிக்கா பின்னர் முழு உலகமும் இந்த காலத்தில் சிறிது சிறிதாக இயந்திரங்களின் பாவனை அதிகமாகியது. பாரிய இயந்திரங்களை வைத்து, பாரிய தொழிற்சாலைகளில் அதிகளவிலான உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன.
நெசவு இயந்திரங்களில் தொடங்கி, நீராவி இயந்திரங்கள், மின்சார இயந்திரங்கள், வாகனங்கள் என்று எக்கச்சக்கமான தொழிற்சாலைகள் உருவாகின. இந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கும், அங்கு உருவாக்கப்படும் வாகனங்கள், மோட்டார் இயந்திரங்கள் போன்றவை இயங்கவும் எரிபொருள் அவசியமானது. ஆகவே, மனிதன் எரிபொருளை தேட ஆரம்பித்தான்.
நிலத்திற்கு கீழே மூன்று பிரதான வடிவங்களில் அவனுக்கு எரிபொருள் கிடைத்தது. ஒன்று நிலக்கரி, இன்னொன்று எண்ணெய், மூன்றாவது உயிர்வாயு. இந்த மூன்றுமே உயிற்சுவட்டு எரிபொருள் என்று அழைக்கப்படுகின்றன.
நிலத்தின் கீழும், கடலின் அடியிலும் இருந்த இந்த எரிபொருட்களை மனிதன் வரைமுறை இன்றி அகழ்ந்தெடுக்க தொடங்கினான். அவற்றை வரைமுறை இன்றி பயன்படுத்தவும் தொடங்கினான். இங்குதான் பிரச்சினை ஆரம்பமானது.
பூமி, அளவுக்கு அதிகமாக குளிராமல், அளவுக்கு அதிகமாக சூடாகாமல் பல மில்லியன் ஆண்டுகளாக சமநிலையில் இருந்துவந்தது. ஆனால், இப்போது மனிதன் உருவாக்கிய தொழிற்சாலைகளும், மனிதன் பயன்படுத்தும் வாகனங்களும், மனிதனின் வேறு சில செய்கைகளும் அதிகப்படியான பச்சை வீட்டு வாயுக்களை வானுக்கு அனுப்ப தொடங்கின.
நிலக்கரியை எரிப்பதாலும், கச்சா எண்ணெய்யை எரிபொருளாக பயன்படுத்துவதாலும், CO2 , மீதேன் போன்ற வாயுக்கள் அதிகளவில் காற்றுடன் கலக்க ஆரம்பித்தன. ஆனால் மனிதன் தான் செய்யும் தீங்கிணைப்பற்றி ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை...
(தொடரும்)..