🔴 LIVE | முப்பெரும் விழா 2023


செருப்பு அணிவதால் இந்த நோய்களையெல்லாம் கட்டுப்படுத்தப்பட முடியுமா?

தமிழ் சினிமாவில் சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கினார் விஜய் ஆண்டனி. இவரது இசை ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. நாக்கு முக்கா, ஆத்திச்சூடி, மச்சக்கன்னி, மஸ்காரா, மாக்காயேலா போன்ற பல பாடல்கள் இளசுகளின் ஆல் டைம் ஃபேவரைட் பாடல்களாக மாறியது. அதைத் தொடர்ந்து ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார் விஜய் ஆண்டனி. இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம், இவரது நடிப்பும் மக்களால் பாராட்டப்பட்டது.

நான் படத்தை தொடர்ந்து, சலீம், சைத்தான், பிச்சைக்காரன் போன்ற படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. நடிகராக மட்டுமல்லாம் தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராக களமிறங்கினார் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். சில மாதங்களுக்கு முன் இவரது மகள் மீராவின் உயிரிழப்பு இவரை மிகவும் பாதித்தது. தொடர்ந்து சினிமா மற்றும் கான்செர்ட்டுகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி மற்றும் மிர்னாலினி ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சில மதங்களாவே விஜய் ஆண்டனி காலில் செருப்பு அணிவதில்லை.

இசைவெளியீட்டு விழா, படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பல நிகழ்ச்சிகளில் அவர் காலில் செருப்பு அணியாமலேயே பங்கேற்று வந்தார். இந்த நிலையில், ஐதராபாத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் ஆண்டனி காலை செருப்பு அணியாமல் பங்கேற்றார். இதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, “செருப்பு அணியாமல் இருப்பது மனதுக்கு அமைதியை தருகிறது, அது உடல்நலத்திற்கும் நல்லது. மேலும், செருப்பு அணியாமல் நடப்பது நமக்குள்ளான தன்னம்பிக்கையை வளர்க்கிறது என்றார்.

விஜய் ஆண்டனியின் இந்தப்பேச்சு சமூகவளைதளங்களில் அதிக அளவு விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதுகுறித்துப்பேசியுள்ள மருத்துவர்கள், தமிழகத்தில் பள்ளி மாணவ. மாணவியருக்கு இலவச காலணிகள் வழங்கியதின் மூலம் இரத்தசோகை நோய், மகப்பேறு காலத்தில் ஏற்படும் மரணங்கள், சிசு மரணங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

குடல் புழுக்கள் என்று சில உள்ளன. ஆங்கிலத்தில் Hook Worm என்று அழைக்கப்படும் இவற்றில் பல வகைகள் இருந்தாலும் Ancylostoma Duodenale மற்றும் Necator Americanus என்பவை மனிதர்களை தாக்கும் வகைகளாக கண்டறியப்பட்டுள்ளது. 

இவை குடலினுள் இருந்து கொண்டு, தினமும் சிறிது சிறிதாக இரத்தத்தை உறிஞ்சும். எனவே குடல் புழுக்கள் உள்ள நபருக்கு இரத்த சோகை (Anemia) வரும். நமது உடலில் நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு பிராணவாயுவை எடுத்து சென்றால் தான் அனைத்து பகுதிகளில் உள்ள திசுக்களும், உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்ய முடியும்.

இரத்த சோகை இருந்தால் இப்படி பிராணவாயுவை எடுத்து செல்வது குறைவாக இருக்கும். எனவே உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராணவாயு (ஆக்சிஜன் Oxygen) போதிய அளவு செல்லாது. எனவே உறுப்புகளால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்கள் எளிதில் சோர்வடைவார்கள். கண் எரிச்சல் இருக்கும். ஆனால் கண் பரிசோதனை செய்தால் கண் சரியாக இருக்கும். தலைவலி, முதுகுவலி என்று இருக்கும். ஊடுகதிர் (எக்ஸ் ரே) எடுத்து பார்த்தால் எலும்பு சரியாக இருக்கும். இது போல் பல பிரச்சனைகள் இருக்கும். 

அதேபோல் இரத்த சோகை அதிகரிப்பதால் இதயத்திற்கு கூட பாதிப்பு வரலாம். (Anemia Causing Heart Failure).

மேலும் இரத்த சோகை உள்ள பெண்கள் கர்ப்பமடையும் போது பல பிரச்சனைகள் வரும். குழந்தைக்கு போதிய வளர்ச்சி இருக்காது, பிரசவத்தில் சிக்கல் வரும். பேறுகால மரணங்கள் (Maternal Mortality) மற்றும் பச்சிளம் குழந்தை மரணங்களுக்கு (Infant Mortality) இரத்த சோகை என்பது மிகவும் முக்கியமான காரணம் ஆகும் .அதே போல் குழந்தைகள் வயிற்றில் புழுக்கள் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.(Stunted Growth).

எனவே கொக்கி புழுக்கள் பாதிப்பு என்பது வயிற்றில் புழு உள்ளது என்று எளிதாக கடந்து செல்லக்கூடிய பிரச்சனை அல்ல. பேறுகால மரணம், பச்சிளம் குழந்தை மரணம், குழந்தை வளர்ச்சிக்குறைபாடு என்று பல சமூக பிரச்சனைகளினுடைய மூலம் குடற்புழுக்கள் ஆகும். அதே போல் இரத்த சோகையினால் உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைந்தால் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளும் வரும்.

சரி, இந்த குடற்புழுக்கள் எப்படி உடலினுள் வருகின்றன என்றால், அதில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது.

காலரா, டைப்பாயிடு போன்ற கிருமிகளும் குடலினுள் வந்து பிரச்சனை செய்கின்றன. ஆனால் காலரா கிருமி என்பது நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது குடிக்கும் நீர் மூலம் உங்கள் குடலினுள் வரும். டைப்பாயிடு கிருமியும் அப்படியே, எனவே நீங்கள் நீரை காய்ச்சி குடித்தால் காலரா, டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க முடியும்.

ஆனால், குடற்புழுக்கள் அப்படி அல்ல. இந்த  Necator Americanus புழுக்களின் சிறுவடிவங்கள் உங்கள் காலில் முதலில் தொற்றுகின்றன. பிறகு காலில் இருந்து இரத்தம் மூலம் நுரையீரல் செல்லுகின்றன. நுரையீரலில் இரத்தக்குழாயில்  (Venules) இருந்து காற்றுப்பைகளுக்குள் (Alveoli) வருகின்றன. நுரையீரலில் இருந்து மூச்சுக்குழாய் (Trachea) மூலம் வெளிவந்து அப்படியே உணவு குழாய் (Esophagus) மூலம் வயிற்றினுள் சென்று குடலுக்குள் செல்கின்றன.

ஒருமுறை குடலினுள் சென்ற Necator Americanus புழுக்கள் 15 வருடங்கள் வரை உள்ளிருந்து உங்கள் இரத்தைத்தை உறிஞ்சுகின்றன. (காலரா, டைபபயிடு எல்லாம் சில நாட்களே, வருடக்கணக்கில் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்).

காலரா டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் போதுM. ஆனால் இரத்தச்சோகையை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் மட்டும் போதாது, உங்கள் காலில் இந்த புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா (Larva) தொற்றுவதை தவிர்க்கவேண்டும்.

எப்படி தவிர்க்க முடியும்?

வெரி சிம்பிள், செருப்பு அணியுங்கள்.

எனக்கு இரத்த சோகை வந்தால் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? குடற்புழுக்களில் இரண்டு வகை மனிதர்களை தாக்கும் என்று பார்த்தோம் அல்லவா? இதில் Necator Americanus என்பது கால்வழியாக மட்டுமே ஒருவரை தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கு மட்டுமே பாதிப்பு.

ஆனால் Ancylostoma Duodenale என்பது கால் வழியாகவும் தாக்கும், வாய் வழியாகவும் தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனை.

தமிழகத்தில் பள்ளி சிறுவர்களுக்கு காலணி வழங்கிய பிறகு இரத்தச்சோகை பாதிப்பு குறைந்தது. பேறுகால மரணங்களை குறைத்ததில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா காலணியும் பங்கு வகிக்கிறது என்பது  உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால் அது தான் அறிவியல்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved