லயன்ஸ் கிளப் தலைவரானார் இராதாகிருஷ்ணன் - சமுதாய தலைவர்கள் வாழ்த்து
லயன்ஸ் கிளப் தலைவராக ராதாகிருஷ்ணன் தேர்வு!
லயன்ஸ் கிளப் ஆப் கோயமுத்தூர் கேலக்ஸி தலைவராக திரு.ஆர்.இராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சமுதாய தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,
கோவை அருகே குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆர்.இராதாகிருஷ்ணன். கோவை வி.எல்.பி.கல்லூரியில் அமைப்பியல் (சிவில்) துறையில் படித்து இளங்கலை பட்டம் பெற்றுள்ள இராதாகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணா பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். சமூக ஆர்வலரான இராதாகிருஷ்ணன் பொதுவாழ்க்கையில் அதிக ஈடுபாடும், சுற்றுச்சூழலில் அதிக ஆர்வமும் கொண்டவர்.

இதன் காரணமாக லயன்ஸ் கிளப் ஆப் கோயமுத்தூர் கேலக்ஸியில் இணைந்து கடந்த 15 வருடங்களாக சேவையாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (27.07.2024) நடைபெற்ற லயன்ஸ் கிளப் கூட்டத்தில் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டு காலம் லயன்ஸ் கிளப் ஆப் கோயமுத்தூர் கேலக்ஸியின் தலைவராக பொறுப்பு வகிக்கப்போகும் இராதாகிருஷ்ணன் பல்வேறு சமூகநலத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்னோட்டமாக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டவுடன் மதுக்கரை பகுதியில் காற்று மாசைக்குறைக்கும் நோக்கில் 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணியை தொடங்கியுள்ளார்.

கோவை குளத்துப்பாளையத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இராதாகிருஷ்ணன் தந்தையார் மறைந்த K.M. ரங்கசாமி அப்பகுதியில் புகழ்பெற்ற கட்டட ஒப்பந்ததாரராக இருந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு செந்தாமரைச்செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இராதாகிருஸ்ணன் லயன்ஸ் கிளப் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சிவக்குமார், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, திமுக பிரமுகர் ஈச்சனாரி மகாலிங்கம், அதிமுக பிரமுகர் சிவசாமி, தொழிலதிபர்கள் கணேசன், சீனிவாசன், தனபால், செல்வக்குமார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

