அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும், வன்னியர் உள் இடஒதுக்கீடு செல்லாது-ஏன்?
கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் 2009 ஆம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்தில் தமிழ்நாடு அருந்ததியர் உள் இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. பட்டியல், பழங்குடியிருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில்அருந்ததியினருக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளில் 3 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசியலமைப்பின் 341 வது பிரிவின் கீழ் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 76 எஸ்சிக்களின் பட்டியலில் அருந்ததியர், சக்கிலியன், மதரி, மதிகா, பகாடி, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகிய சாதிகளை உள்ளடக்க வேண்டும் என்று சட்டம் வரையறுத்தது.
ஏற்கனவே பஞ்சாப், ஹரியான, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல்வேறு சாதிகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதையும், தமிழகத்தில் மிகபிற்பட்டோர் பிரிவில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதையும் நீதிமன்றங்கள் செல்லாது என்று அறிவித்த நிலையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆகஸ்டு 1 ஆம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு 6:1 என்ற அடிப்படையில் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், வன்னியர் உள் ஒதுக்கீடு உள்ளிட்ட பிற உள் ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஏன் முரண்பாடான தீர்ப்பு வழங்கியுள்ளது என்ற குழப்பம் சாமானிய மக்களுக்கு எழுவது இயல்பு. இதைப்பயன்படுத்திக்கொண்டு வன்னியர் உள்ஒதுக்கீடு செல்லும் என்றும் தமிழக அரசு தங்களுக்கு அநியாயம் செய்துவிட்டதாகவும் தவறான தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு சோசலிச மையம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,

அருந்ததியர்கள் ஒரு தனி சாதி தானே. அவர்களுக்கு மட்டும் உள் ஒதுக்கீடு எப்படி வழங்கப்பட்டது என்று சிலர் கருதுகிறார்கள். ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். அருந்ததியர் என்பவர்கள் ஒரு சாதி கிடையாது. நீங்கள் இணையத்தில் தமிழ்நாடு அட்டவணைச் சாதிகள் பட்டியல் என்று தேடினால் ஒரு பட்டியல் வரும். அந்தப் பட்டியலில் உள்ள பல சாதிகளின் தொகுப்புகளை இணைத்துத் தான் அருந்ததியர்களுக்கான ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார்கள். அது உள் ஒதுக்கீடு இல்லை என்பது வேறுவிஷயம். தனியாக விவாதித்து இருக்கிறோம். அப்படி ஒதுக்கீடாக அவர்கள் கருதிக் கொண்டாலும் ஒரு சாதிக்கு கொடுக்கவில்லை. அந்தப் பட்டியலை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
5. அருந்ததியர்
12. சக்கிலியன்
37. மாதாரி
38. மாதிகா
என்று இன்னும் பல சாதிகளை இணைத்து தான் அருந்ததியர் என்று பொதுப் பெயரிட்டு தனி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார்கள். சாதிப் பட்டியலில் பல வரிசை எண்ணிக்கையில் உள்ள சாதிகளை இணைத்து அருந்ததியர் என்று ஒரு வகைப்பாட்டுக்குள் தொகுத்து, பல சாதிகளை ஒருங்கிணைத்து தான் தொகுப்பு முறையில் வழங்கப்பட்டுள்ளது. எனவே அருந்ததியருக்கான இட ஒதுக்கீடு என்பது ஒரு தனி சாதிக்கான ஒதுக்கீடு அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டம் வகுப்புவாரி இட ஒதுக்கீடு தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறுகிறதே தவிர தனி சாதிக்கு வழங்க முடியும் என்று கூறவில்லை. அதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும்போதே பட்டியலின மக்களில் அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளரைக் காட்டிலும் எந்த அளவு சமூக கல்வி நிலைகளில் பின்தங்கியுள்ளனர் என்பதை தரவுகளோடு மெய்ப்பித்து தான் இந்த முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
சமூக நீதிப் போராட்டத்தில் இது மிகவும் முக்கியமான தீர்ப்பாகும். பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற தீர்ப்பை மகிழ்வோடு வரவேற்கிறோம்.
தோழமையுடன்
மருதுபாண்டியன்,
சோசலிச மையம்

