நினைவை விட்டு நீங்காத மாவீரனாரின் 225-வது நினைவுநாள்!

இந்திய விடுதலைக்கு விதையாய் வீழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 225-வது நினைவுநாள் நிகழ்ச்சிகள் நேற்று (16.10.2024) தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்றது. ஒட்டுமொத்த நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக, அரசு நிகழ்வாக நடத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கிண்டி காந்தி மண்டபவளாகத்திலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மலர்தூவி மரியாதை செய்தது கட்டபொம்மனார் சரித்திரத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி க.பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் கு.அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் சமூக வலைதளப்பக்கங்களில் மாவீரன் கட்டபொம்மன் தியாகத்தை நினைவு கூர்ந்து பதிவிட்டிருந்தனர்.
சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் ஊமைத்துரை தொண்டர் படையினர் கட்டியுள்ள பயணிகள் நிழற்கொடையை திறந்துவைத்து, அங்குள்ள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் நிரந்தர நிலையாணை வெளியிடப்பட்டுள்ளதால் தலைமைக் கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தலைமையில் கயத்தாறு மணிமண்டபத்திலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவருடன் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
மதிமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச்செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ கயத்தாறு மணிபண்டபத்தில் அக்கட்சியின் முன்னனி தலைவர்களுடன் கலந்துகொண்டு மாவீரன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியபின், வீரபாண்டிய கட்டபொம்மன் தமது படை வரிசையில் வெள்ளையத்தேவன் சுந்தரலிங்கம் தானாதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை என்று ஒட்டுமொத்த சமூகங்களையும் ஒருங்கிணைத்து நாட்டு விடுதலைக்கு போராடிய அந்த ஒற்றுமை உணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம் என்று உணர்ச்சி பொங்க பேசினார் துரை வைகோ.
முன்னதாக,கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியின் சிறந்த மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினார். தவிர, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நேரடி வாரிசான ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு என்ற வீமராஜா அவர்கள் சற்று உடல் நலிவுற்ற நிலையிலும் துரை வைகோ அவர்களை வரவேற்க சக்கர நாற்காலியில் காத்திருந்தார். அவர் இருக்கும் இடத்திற்கு ஓடோடிச் சென்று அவரை வணங்கி நலம் விசாரித்தார் துரை வைகோ.
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கயத்தாறு மணிமண்டபத்திலுள்ள சிலைக்கு அவைத்தலைவர் பி.எஸ்.மணி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் திருப்பூர் மாவட்டம் பாரபாளையம் கட்டபொம்மன் சிலைக்கு அம்மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி R.S ல் வீரபாண்டிய கட்டபொம்மன் நற்பணி மன்றத்தினர் வாகன பேரணியாக சென்று கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்துநிலையம் அருகே த.வீ.க.ப.கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நகர மன்றத் தலைவர் கலந்துகொண்டு கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அனைத்துக்கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டர்.
அதேபோல்,தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் 225வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவருமான நாகராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பொன் முத்தையா பாண்டியன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் யு எஸ் டி சீனிவாசன், வட்டார காங்கிரஸ் தலைவரும், ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான மகேந்திரன், நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக முன்னாள் செயலாளர் சரவணன், ம தி மு க நகர செயலாளர் கணேசன், முன்னாள் பேருராட்சி மன்றத் துணைத் தலைவர் செல்வம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும், கட்டபொம்மன் தகவல் தொழில் நுட்ப அணியின் கணேஷ் கண்ணன், பொறியாளர் அணி தலைவர் சங்கர், வட்டார விவசாய அணி தலைவர் முருகேசன், கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் தங்க முனியாண்டி, வேல்ராஜ், மதிமுக ராஜேந்திரன், பால்சாமி, சக்திவேல், காந்தி, பீர்முகம்மது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக கட்டபொம்மன் அறக்கட்டளை செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து கயத்தாரில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் B.பழனிசாமி, தொட்டியநாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி , அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலப்பட்டி சின்னசாமி, தேவராஜ், விடுதலைக் களம் கட்சி நிறுவனத் தலைவர் கொ. நாகராஜ் மற்றும் தெலுங்கு பெடரேஷன் தெற்கு மண்டல மாநில செயல் தலைவர் திருச்சி எஸ் எல் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.