🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உயிர்க்கொல்லி புற்றுநோய்க்கு வந்தாச்சு தடுப்பூசி!

புற்றுநோய்க்கு எதிரான புதிய தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும், இது புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி அல்ல, மாறாக, ஏற்கனவே புற்றுநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஒரு வகை மருந்து என்றும் சொல்லப்படுகிறது.

புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்துக் காணும் முன் புற்று நோய் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

புற்று நோய் என்பது குறிப்பிட்ட இடத்தில் "செல்கள்" சொல்பேச்சுக்  கேட்க மறுத்து அதிகமான எண்ணிக்கையில்  பெருகுதல். அதிகமான அளவு வளர்ச்சி அடைதல், தனக்கான காலம் முடிந்தாலும் மரணிக்க மறுத்தல், உடலின் எதிர்ப்பு சக்தியையும் மீறி சாகாவரம் பெற்று தொடர்ந்து கட்டுப்பாடற்று வளருதல், தனக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரித்து  உடலில் உள்ள சத்துக்களை சுயநலத்துடன் உறிஞ்சிக் கொள்ளுதல், குறிப்பிட்ட இடத்தில் இருப்பை நிலைநாட்டியவுடன் அருகில் இருக்கும் இடங்களை ஆக்கிரமித்தல், பிறகு ரத்தத்தில் கலந்து தூர உறுப்புகளுக்கும்  பரவுதல் என புற்று நோய் என்பது சராசரி செல்களின் தன்மையில் இருந்து மாறுபட்டு நமது செல்களே நமக்கு வில்லனாக மாறுவதாகும். 

அதுவரை நன்றாக சொல்பேச்சுக் கேட்டு செயல்பட்டு வந்த நமது செல்கள் எப்படி இவ்வாறு மாறுகின்றன? 

அதற்கு, அந்த செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அமைகின்றன. பொதுவாக செல்களில் புற்றுத் தன்மையை கட்டுப்படுத்தும் மரபணுக்கள் இயற்கையாகவே உண்டு. கூடவே ஒரு செல்லுடைய சுவர் மற்றொரு செல்லுடைய வெளிப்புற சுவரை மீறி வளர்தலைத் தடுப்பதற்கு, தனக்கான முதிர்ச்சி வயது வந்தால் தானாக தன்னை மாய்த்துக் கொள்வதற்கு , தேவையற்ற எண்ணிக்கை பெருக்கத்தை தடுப்பதற்கு என பல மரபணுக்கள் செல்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

இவை தான் நமக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றன. 

எனினும், ஓரிடத்தில் தொடர்ந்து நிகழும் காயங்கள் - உதாரணம் சிகரெட் புகையால் நுரையீரலில் நிகழும் காயம், புகையிலையால்  வாயில் நிகழும் காயம் அல்லது குறிப்பிட்ட வைரஸ்களால்  ஏற்படும் காயங்கள். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இவற்றால் இந்த புற்றுநோயில் இருந்து காக்கும்  மரபணுக்களில்  பாதிப்பு ஏற்படுகிறது. எனவே புற்று நோய் உண்டாகிறது. 

இப்போது புற்றுநோய் செல்களில் மாற்றப்பட்ட வேறுபட்ட  மரபணுக்கள் வேலை செய்கின்றன. இவை அடுத்தடுத்து பல்கிப் பெருகும் அனைத்து புற்று செல்களிலும் சிட்டி 2.0 போல உள்ளிருந்து கொண்டு அவற்றை இயக்குகின்றன. இவ்வாறு தான் இயங்குவதற்கு ஏற்றவாறு புற்றுநோய் செல் புரதங்களை உருவாக்கிக் கொள்கின்றன. 

நிற்க... 

புற்று நோய் செல்கள் வளம்பெற்று வளருவதற்கு முக்கியமானவை புற்று நோய் மரபணுக்கள். அடுத்து புற்று செல்களை கட்டமைக்கத் தேவையான புற்று  செல்களில் உள்ள புரதம்.நமது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மரபணுக்களை அதன் பணியை செய்யாமல் தடுத்து விட்டாலோ அல்லது புற்று செல்கள் உருவாக்கும் பிரத்யேக புரதங்களை அழித்துவிட்டாலோ  புற்றுக்கட்டிகளையும்  சேர்த்து அழிக்கலாம் தானே?

அந்தத் தொழில்நுட்பம் தான் "எம்ஆர்என்ஏ" என்று அழைக்கப்படும் மெசஞ்சர் ஆர்என்ஏ (mRNA அல்லது MESSENGER RNA)  தொழில்நுட்பமாகும்.

இந்த மெசஞ்சர் ஆர்என்ஏ என்றால் யாவை? 

ஒவ்வொரு செல்லுக்குள்ளும்  நியூக்லியஸ் பகுதியில் டிஎன்ஏ இருக்கிறது. டிஎன்ஏ கூறும் செய்திகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு, ரிபோசோம்களுக்கு  அதை எடுத்துக் கொண்டு சென்று புரதங்களை உற்பத்தி செய்யத் தூண்டுவது மெசஞ்சர் ஆர்என்ஏவின் (தூது செல்லும் மரபணுப் பொருள்) பணியாகும். 

அறிவியலாளர்கள் கடந்த முப்பது வருடங்களாக ஆராய்ச்சி செய்து,மெசஞ்சர் ஆர்என்ஏவை செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து விட்டனர். 

மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை வைத்து புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த அறிவைத் தான் அறிவியலாளர்கள் கோவிட் பெருந்தொற்றின் போது தடுப்பூசி உருவாக்கத்தில் மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுக் காண்பித்தனர். 

உண்மையில் கோவிட் பெருந்தொற்று வந்து ஃபைசர், மாடர்னா  உள்ளிட்ட மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில்நுட்ப தடுப்பூசிகள் வெற்றி பெறும்வரை மருத்துவ அறிவியல் உலகம் இந்த தொழில்நுட்பம் குறித்து பெரிதும் முக்கியத்துவம் தராமல் இருந்தது. 

எனினும் தற்போது கடுமையான விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக "மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை கண்டறிந்து கூறிய "கடாலின் கரிக்கோவுக்கும்  ட்ரியூ வெய்ஸ்மேனுக்கும் 2023 க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்களின் கண்டுபிடிப்பால்  பல லட்சம் உயிர்கள் கோவிட் பெருந்தொற்றின் போது காக்கப்பட்டதே  அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதற்கான முக்கிய காரணம். 

சரி இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்று தடுத்தலில்  உபயோகிக்க முடியும்? 

பெருந்தொற்றை உருவாக்கிய கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் / அல்லது புற்று நோய் செல்கள் உண்டாக்கும் புரதங்கள் இவற்றை மெசஞ்சர் ஆர்என்ஏவுக்கு வைத்து பேக் செய்து அதை சுற்றி நானோ தொழில்நுட்பம் மூலம் கொழுப்புத் திவலைகளைப் பூசி உடலுக்குள் செலுத்தும் போது, இந்த வைரஸின் புரதம் / புற்று செல்களின் புரதம் கொண்ட  மெசஞ்சர் ஆர்என்ஏக்கள் உடலின் செல்களினால் உட்கொள்ளப்படும். செல்களுக்கு உள்ளே சென்ற எம் ஆர் என் ஏ - அந்த செல்களை தன்னகத்தே கொண்டு வந்ததைப்  போலவே புரதங்களை உருவாக்கக் கூறும். இவ்வாறு உருவான புரதங்களை நமது உடல்  "ஆண்ட்டிஜென்களாக" பாவிக்கும்.

இந்த ஆண்ட்டிஜென்களை, நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் உள்ள டெண்ட்ரிடிக் செல்கள் நன்குணர்ந்து  அவற்றை எதிர்க்கும் திறனை அறிந்து கொண்டு, அதை டி செல்களுக்கு  கற்பிக்கும். 

டி- செல்கள் இந்த புரதங்கள் அனைத்தையும் தேடித் தேடி அழித்தொழித்து விடும். கூடவே இனி வருங்காலத்தில்  இதே போன்ற புரதங்கள் நம் உடலில் எங்கேனும் வருமாயின் அவற்றையும்  தேடிக் கொள்ளும். 

இவ்வாறு மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை வைத்து மாடர்னா  நிறுவனம் நடத்திய ஆய்வில் தலை மற்றும் கழுத்துப் பகுதி புற்றுநோய் இருந்த பத்து பேரில் இருவருக்கு முழுமையாக குணமானது ஐந்து பேருக்கு புற்றுக்கட்டியின் அளவு சுருங்கியது.

இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு புற்று நோய் கட்டியின் சிறு நுண் துண்டை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி அது உருவாக்கியுள்ள உள்ள புரதங்களை பிரித்தெடுத்து  அவற்றை மெசஞ்சர் ஆர்என்ஏவில்  பேக் செய்து உடலுக்குள் செலுத்தினால், அந்த குறிப்பிட்ட புரதத்திற்கு  எதிராக சிறப்பான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்டு, அந்த புரதத்தைக் கொண்ட புற்று செல்களும் அழிக்கப்படும். 

இத்தகைய மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசிகளில் 34 புற்றுசெல் உருவாக்கும் புரதங்களை பேக் செய்து வழங்கும் அளவு தொழில்நுட்பம்  முன்னேறியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசியை விலங்குகளுக்கு ( PRE CLINICAL STUDIES)  வழங்கி புற்று நோய் கட்டிகளையும் மெட்டாஸ்டாசிஸ் எனும் தூர பரவல்களையும் முழுவதுமாக குணப்படுத்தியதை  கண்டறிந்துள்ளனர். 

தற்போது இந்த தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்த பின் 2025 இல் பொதுமக்களுக்கு தடுப்பூசியாக வழங்க உள்ளனர்.

அது எப்படி முடியும்? 

ஆம். உதாரணத்திற்கு ரஷ்யாவில் அதிகமாகக் கண்டறியப்படும் சில புற்று நோய்கள் உதாரணமாக, நுரையீரல் புற்று, புராஸ்டேட் புற்று, மார்பகப்புற்று, ரத்தப் புற்று போன்ற புற்று செல்கள் உருவாக்கும் பொதுவான புரதங்களை ஆராய்ந்து அவற்றை மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசியில்  பேக் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் போது , எதிர்காலத்தில் இந்த புற்று நோய்கள் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு சக்தி அந்த செல்களை கொன்றுவிடும். 

இதே தொழில்நுட்பத்தில் மெலனோமா எனும் தோல் புற்றுநோய்க்கு எதிராக 2021 ஆம் ஆண்டு BNT111 எனும் தடுப்பூசிக்கு எஃப்டிஏ அவசர கால முன் அனுமதி வழங்கியது . மே 2024இல்  எப்ஸ்டின் பார் வைரஸ் மூலம் உருவாகும் புற்று நோய்க்கு எதிரான எம் ஆர் என் ஏ தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த வகை தடுப்பூசிகளை மிக எளிமையாகவும் விரைவாகவும் உருவாக்க முடியும் என்பதால் புற்று நோய் கண்டறியப்பட்ட சில வாரங்களுக்குள் நோயருக்கு ஏற்ற பிரத்யேக தடுப்பூசியை (PRECISION MEDICINE)  தயாரிக்க முடியும். 

 மெசஞ்சர் ஆர் என் ஏ எனும் தொழில்நுட்பம் புற்று நோய் மற்றும் தொற்று நோய் தடுப்பில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஆதிக்கம் செலுத்தப்போவது கண்கூடு.

இதன் முக்கியத்துவம் என்ன?

புதிய சிகிச்சை முறை: இது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும்.

இலவச விநியோகம்: இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதால், பலருக்கு இது பயனளிக்கும்.

வேகமான வளர்ச்சி: ரஷ்யா மட்டுமல்லாமல், பிற நாடுகளும் இதே போன்ற திட்டங்களில் பணியாற்றி வருகின்றன. இதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை துறையில் வேகமான வளர்ச்சி ஏற்படலாம்.

எதிர்காலத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?

தனிநபருக்கான சிகிச்சை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்படலாம்.

புதிய வகை புற்றுநோய்களுக்கான சிகிச்சை: இந்த தொழில்நுட்பம், இதுவரை சிகிச்சை அளிக்க கடினமாக இருந்த புதிய வகை புற்றுநோய்களுக்கான சிகிச்சையை சாத்தியமாக்கும்.

இந்த புதிய கண்டுபிடிப்பு புற்றுநோய் நோயாளிகளுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. இருப்பினும், இந்த தடுப்பூசியின் நீண்ட கால விளைவுகள் மற்றும் பிற வகை புற்றுநோய்களுக்கு எவ்வாறு செயல்படும் என்பதை அறிய மேலும் ஆராய்ச்சிகள் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved