பயிர்காப்பீடு - விவசாயிகளை பலியிடத்தயாராகும் அரசு!
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு பெறுவதற்கு, பயிர்க்கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த வேளாண்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களுக்கு கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தின் மூலம் பயிர்க்கடன், வேளாண்துறையின் மூலம் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்துவருகின்றனர். இவ்வகையில் பயிர் காப்பீடு திட்டத்தின் பயன் பெற கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. பயிர் கடன் திரும்பச் செலுத்தும் நிபந்தனைகளை மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளார்கள்.
பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் தென்னை மரங்களுக்கு ஒரு வருட தவணையும், மக்காச்சோளம் பயிர் செய்ய ஆறு மாத கால தவணையும், கொண்டக்கடலை பயிர் செய்ய இரண்டு மாத தவணையில் பயிர் கடன்களை திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்படி விவசாயிகளுக்கு கடன் தரப்படுகிறது. விவசாயிகளுக்கு வேளாண்மை செய்யப் போதிய பணம் இல்லாமல் தான் கடன் பெறுகிறார்கள். தவணைகளை குறுகிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் மீண்டும் கடன் சுமை அதிகரிக்கிறது. எனவே பயிர் கடன் குறித்த நிபந்தனைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
அதேபோல் பயிர்க்காப்பீட்டிலும் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் தாங்கள் விதைக்கும் பயிர்களை காப்பீடு அதாவது இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். அந்த இன்சூரன்ஸ் தொகைக்கு ஏற்ப விவசாயிகள் பிரீமியம் தொகையை காப்பீடு நிறுவனங்களுக்குக் கட்ட வேண்டும். விவசாயியும் பிரீமியம் சரியாக கட்டி விடுவார்.
இப்போது ஒருவேளை ஏதேனும் காரணத்தால் பயிர் விளையாமல் போனால்,காப்பீடு நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
அந்த விவசாயி நிலத்திற்கு வந்து ஆய்வு செய்து,சேதத்தை கணக்கெடுத்து,அவர் எந்த தொகைக்கு காப்பீடு செய்தாரோ அந்தத் தொகைக்கு காப்பீடு பணம் அதாவது இன்சூரன்ஸ் பணம் தர வேண்டும். இது தானே நடைமுறை?
இதற்குத் தானே விவசாயி பிரீமியம் கட்டுகிறார்?
ஆனால் இப்போது புதிய பயிர் காப்பீடு விதிகள்படி அப்படி நடக்காது. ஒரு விவசாயி தன் தனிப்பட்ட நிலத்திற்கு காப்பீடு செய்திருந்தாலும், ஒட்டுமொத்த தாலுகா அல்லது பிர்க்கா பகுதியின் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் தான் அந்த விவசாயிக்கு காப்பீடு கிடைக்கும்.
"அய்யா...நான் என் நிலத்திற்கு காப்பீடு செய்து, அதற்கு பிரீமியமும் கட்டியிருக்கிறேன். என் நிலத்தின் பாதிப்புக்கு எனக்கு இன்சூரன்ஸ் தாருங்கள்.." என்று ஒரு விவசாயி தான் பிரீமியம் கட்டிய இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சென்று கேட்டால்,
நன்றாக பேண்ட்-சட்டை போட்டு டை கட்டி ஏ.சி ரூமில் இருக்கும் இன்சூரன்ஸ் அதிகாரி, ஒன்றிய அரசின் புதிய காப்பீடு விதிமுறைகளைக் காட்டி உதட்டைப் பிதுக்கி விடுவார்.
எப்பேர்ப்பட்ட அநீதி இது?
விவசாயிகளைக் காக்க பயிர் காப்பீடு திட்டம் தரச் சொன்னால், காப்பீடு நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையில் பயிர் காப்பீடு விதிகளை கடுமையாக்கி இருக்கிறது ஒன்றிய அரசு. இதுதவிர, காப்பீடு துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு வேறு ஒப்புதல் தந்துள்ளது மத்திய அரசு.
ஏற்கனவே உரவிலை உயர்வு, உரமானியம் ரத்து, பயிர்க்கடனுக்கான வட்டி அதிகரிப்பு போன்ற விவசாய விரோதக்கொள்கைகளால் நலிந்துவரும் விவசாயிகளை, பெருநிறுவனங்களின் பேராசைக்கு விவசாயிகளை கவுகொடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதால், விவசாயிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

