🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கிராமநத்தம் - உச்சவரம்பை காரணம் காட்டாதே- உயர்நீதிமன்றம் அதிரடி!

நிலங்கள் பலவகைகளாகப் பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மக்களின் குடியிருப்புக்காக பயன்படுத்தப்படும் நிலங்கள் அதிக கவனம் பெறுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிடம் என்பது வாழ்வின் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆங்கிலேயர்கள் பல சிற்றரசுகளை ஒருங்கிணையத்து  இந்திய தேசமாக கட்டமைத்தபோது, கிராமபுறங்களில் எதிர்காலத்தில் மக்கள் வீடுகள் கட்டிக்கொள்வதற்கு என ஒதுக்கப்பட்ட நிலம் கிராம நத்தம் எனப்பட்டது.  இது ஊர் நத்தம் மற்றும் சேரி நத்தம் என இருவகைப்படும். கிராம நத்தம் அரசாங்கத்தின் சொத்து அல்ல, ஆனால் கிராம பஞ்சாயத்திற்கு சொந்தமானது.

சுதந்திரத்திற்குப்பின் கிராம நத்தங்களை அடையாளம் கண்டு வீடற்ற மக்களுக்கு அவ்வப்போது அரசுகளால் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் இந்த இடங்களை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும், வழக்குகளும் நீடித்துவருவது வழக்கமான ஒன்று. கிராம நத்தம் சம்மந்தமான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று முன்தினம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதன் விவரம் வருமாறு,  

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மருதமுத்து, ராஜேந்திரன், சுப்பிரமணியன் கிராம நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க கோரி விண்ணப்பித்தனர். ஆனால் 3 சென்ட்டுக்கு மேல் உள்ள நிலத்துக்கு, பட்டா வழங்க முடியாது என தாசில்தார் விண்ணப்பங்களை நிராகரித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில்,  "கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு 1905 ஆண்டு நில ஆக்கிரமிப்பு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே யாரும் அந்த நிலத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாட முடியாது" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பில் கூறியிருப்பதாவது, 1905 ஆண்டு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ், அரசின் அதிகாரம் என்பது, நில வருவாய் நிலுவைத் தொகையை வசூலிப்பதை தவிர, அதற்கு மேல் எதுவும் இல்லை என, கடந்த 1903ம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழுமையான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

நிலம் கிராம நத்தமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினாலோ அல்லது உச்சவரம்புகளை மேற்கோள் காட்டியோ, பட்டா கோரும் நபர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டியதில்லை.

தனி நபர்கள் பட்டா கோரும் போது, அதில் குடியிருக்கின்றனரா அல்லது காலி நிலமா என்பதை மட்டுமே பரிசீலிக்க வேண்டும். கிராம நத்தம் நிலங்களில் நீண்டகாலம் குடியிருந்தால் அந்த நிலத்தை அரசு நிலமாகவோ, அக்கிரமிப்பாகவோ கருதமுடியாது. கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால், அந்த நிலம் அரசுக்கு சொந்தம். ஆக்கிரமிப்புகள் இருந்தால் அரசு அகற்றலாம். இது தொடர்பாக, நில நிர்வாக ஆணையர், நான்கு வாரங்களில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved