சுங்கக்கட்டண உயர்வில் பாஜக-திமுக கூட்டணி?

தமிழகத்தில் மொத்தமுள்ள 78 சுங்கச்சாவடிகளில் 36 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுமார் 3% முதல் 5% கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்க கட்டண உயர்வு 3.6.2024 முதல் அமலுக்கு வந்தநிலையில், இன்று மீண்டும் நாடுமுழுவதும் கிட்டத்தட்ட 1,100 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக சுங்கச்சாவடி உள்ள மாநிலமான தமிழகத்திலிருந்து மக்களின் வேர்வைத்துளிகள் வெள்ளிப்பணமாக மத்திய, மாநில அரசுகளின் துணையோடு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.
சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது. ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தப் பிரச்னையை ஆய்வு செய்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதுக்குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதப்பட்டது. இதுக்குறித்து பேச டெல்லிக்கு செல்ல உள்ளோம் என்று மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அறிவிக்கிறாரே தவிர, இதுவரை உருப்படியாக எதுவும் நடந்தபாடில்லை.
இதுகுறித்துப்பேசும் பொதுமக்கள் " உங்களால் நீட் தேர்வைத்தான் ரத்து செய்யமுடியவில்லை, சுங்கக்கட்டண சுரண்டலைக்கூடவா தடுத்து நிறுத்தமுடியவில்லை" என்று திமுக அரசின் மீது குமுறுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை அமைத்த முதல் 15 ஆண்டுகளுக்கு தான் சுங்கச்சாவடியில் முழுக்கட்டணத்தை வசூலிக்க முடியும். ஆனால், அதன் பிறகு, அந்தக் கட்டணத்தில் 40 சதவிகிதத் தொகையைத் தான் பராமரிப்பு தொகையாக வசூலிக்க வேண்டும். ஆனால், இதை மீறி, தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்னும் முழுத்தொகை சுங்கச்சாவடிகளின் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்தையும் தாண்டி, தமிழ்நாட்டில் பரனூர், கிருஷ்ணகிரி, ஶ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட கிட்டதட்ட 32 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளது. அந்த சுங்கச்சாவடிகளை திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை, மாநில பாஜக-வும் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை.
காலாவதியான சுங்கச்சாவடிகளையும், குறிப்பிட்ட இடைவெளியில் இல்லாமல் இருக்கும் சுங்கச்சாவடிகளையும் நீங்குவோம் என்று மத்திய அரசு உறுதியளித்து இருப்பதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கூறி ஆண்டுகள் பல கடந்தும் எதுவும் நடந்தபாடில்லை.
இன்றைய சுங்கக்கட்டண உயர்வுக்கு எதிராக தமிழக முதல்வர் சமூகவலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்ததோடு சரி, வீரியமாக எதையும் செய்துவிடவில்லை. நாடாளுமன்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இந்த கட்டண உயர்வு தெரியுமா? என்று கூடத் தெரியாத அளவுக்குத்தான் அது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.
ஆட்சியைப்பிடிப்பதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் அடித்துக்கொள்ளும் திமுக, பாஜக இரண்டு கட்சிகளும் பெறுநிறுவனங்கள் மூலமாக மக்களைச் சுரண்டுவதில் மறைமுகக்கூட்டணி அமைத்து செயல்படுவதற்கு சுங்கக்கட்டண உயர்வே சாட்சி.