🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆளுநருக்கு அதிர்ச்சி! ஆளும்கட்சிக்கு மகிழ்ச்சி! அரசியலமைப்புக்கு புத்துணர்ச்சி!

இந்திய விடுதலைக்குப்பின் டெல்லியை ஆண்டுவந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அரசு முதல் சந்திரசேகர் தலைமையிலான சிறுபான்மை அரசு வரை மாநிலங்களை மிரட்டவும், அடிபணிய வைக்கவும், அடிபணிய மறுக்கும் அல்லது தூக்கி எறிய விரும்பும் மாநில அரசுகளை  அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சிக்கலைப்புகளை நடத்திவந்தது. 1988-1989 காலகட்டத்தில் கர்நாடக மாநிலத்தை ஆர்.எஸ்.பொம்மை தலைமையிலான ஜனதாதள ஆட்சி நடைபெற்றுவந்தபோது, மாநில அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக்கூறி 356-வது பிரிவைப்பயன்படுத்தி அட்சி கலைக்கப்பட்டது. ஆட்சிக்கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 1994-இல் தீர்ப்பு வழங்கியது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், மாநிலங்கள் மீது 356-வது பிரிவைப்பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது.  அதன்படி,

ஒரு மாநிலத்தின் அரசாங்கத்தை கலைக்க ஜனாதிபதியின் அதிகாரம் முழுமையானது அல்ல என்று அது கூறியது.

(ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்த) பிரகடனத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அங்கீகரித்த பின்னரே குடியரசுத் தலைவர் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அது கூறியது.

அதுவரை, குடியரசுத் தலைவர் சட்டமன்றத்தை மட்டுமே இடைநிறுத்த முடியும்.

பிரகடனம் இரு அவைகளின் ஒப்புதலைப் பெறவில்லை என்றால், இரண்டு மாத காலத்தின் முடிவில் அது காலாவதியாகி, பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசாங்கம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்.

இடைநிறுத்தப்பட்ட சட்டமன்றமும் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.

பிரிவு 356 அமலாக்கத்தின் பிரகடனம் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆட்சிக்கலைப்புக்கு வழியில்லாமல் போனது. இந்நிலையில் 2014-இல் மத்திய ஆட்சிக்கு வந்த பாஜக அரசு ஆட்சிக்கலைப்புக்கு பதிலாக, தன்னால் நியமனம் செய்யப்படும் கவர்னர்கள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தொல்லைகள் கொடுத்துவந்தது. மாநில அரசுக்கு இணையாக ஒரு போட்டி அரசாங்கத்தை ஆளுநர் மாளிகையில் இருந்து நடத்தப்பட்டுவந்தது. ஆளுநர்களின் இந்த அதிகார அத்துமீறலால் டெல்லியில் கெஜ்ரிவால், பஞ்சாபில் மான், மே.வங்கத்தில் மம்தா, கேரளாவில் பினராய் விஜயன், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், புதுவையில் நாராயணசாமி, ரங்கசாமி ஆட்சிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்துவந்தன. ஆளுநர் என்ற பூனைக்கு யார் மணிகட்டிவது என்பது தெரியாமல் எதிர்க்கட்சிகள் திண்டாடி வந்தநிலையில், தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அத்தோடு "ஆளுநர் சட்டத்தை கிடப்பில் போட்டாலே அது அனுமதியில்லை என்று அர்த்தம்" என்று புது வியக்கானம் வேறு அளித்தார்.

இதுகுறித்து பல்வேறு கருத்துகள், விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2023 அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததின் மூலம் சட்டமன்றம் தனது கடமைகளைச் செய்ய ஆளுநர் தடுக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி, ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார்.

இதன்மூலம் அரசியலமைப்பு சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளைத் தமிழக ஆளுநர் நிறைவேற்றவில்லை. மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத் தாமதிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆளுநரின் இத்தகைய செயல் சட்டப்படி தவறு. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததின் மூலம் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். ஆளுநரின் இத்தகைய செயல் தன்னிச்சையானது மற்றும் அர்த்தமற்ற செயல் ஆகும். தமிழக ஆளுநர் அரசியல் எதிரி போல் செயல்படுகிறார்.

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிந்து தீர்ப்புக்காக காத்திருந்த நிலையில், இன்று (08.04.2025) உச்சநீதிமன்றம் வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு  அனுப்பிவைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம்,  இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தது சட்டவிரோதம் என்றும், ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது என்றதோடு, இந்த மசோதாக்கள் மீது குடியரசுத்தலைவரின் நடவடிக்கையும் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றமே அனுமதியளித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக உள்ளது என்றும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை, ஆளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரங்கள் இல்லை, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

வரலாற்றுச்சிறப்புமிக்க இந்தத்தீர்ப்பின் மூலம் அரசியலமைப்புச்சட்டமே உயர்ந்தது என்று நிலைநிறுத்தப்பட்டிருப்பதோடு, பொம்மை வழக்கில் பிரிவு 356-க்கு ஒரு முடிவுரை எழுதியதுபோல், ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கும் உச்சநீதிமன்றம் முடிவுகட்டியுள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழகம் தாண்டி ஆளுநர்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் எதிர்க்கட்சிகள் ஆளும் பல்வேறு மாநிலங்களுக்கு நிம்மதிப்பெருமூச்சை வழங்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய தீர்ப்பின் முக்கிய சாராம்சமும்...

1. மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்.

2. ஆளுநர் ஒருமுறை மசோதாவை நிறுத்தி வைத்துவிட்டால் அதன் தொடர் நடவடிக்கையை அவர்தான் மேற்கொள்ள வேண்டும்.

3. 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க உரிமை இல்லை.

4. 10 மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.

5. 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம்.

6. ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை அனுப்பி வைத்த ஆளுநரின் நடவடிக்கை ரத்து.

7. ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது.

8. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.

9.  2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.

10. மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு ஒருமாதம் காலக்கெடு.

11. சில பிரிவுகளில் ஒரு மாதத்திலும் சில பிரிவுகளில் 3 மாதத்துக்குள்ளும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved