கவிராச பண்டிதர் சிலை சீரமைக்கப்படும் - துரை வைகோ எம்.பி. உறுதி!

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள கவிராச பண்டிதர் செகவீரபாண்டியனாரின் சிலை செப்பனிடப்பட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ சமுதாயத் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார். இதன் விவரம் வருமாறு,
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர் செகவீரபாண்டியனார். கவிராச பண்டிதர் எனப் போற்றப்பட்ட செகவீரபாண்டியனார் 10.3.1886 -இல் கோயில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட மணியாச்சிக்கு அருகிலுள்ள ஒட்டநத்தம் எனும் கிராமத்தில் (இதை "சின்னப் பாஞ்சாலங்குறிச்சி" என்றும் கூறுவர்) பெருமாள்சாமி - ஆவுடையம்மைக்கும் மகனாகப் பிறந்தார்.
மூன்று வயதிலேயே தந்தையை இழந்த செகவீரபாண்டியனார், உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்ப வறுமைகாரணமாக ஐந்தாம் வகுப்பிற்கு மேல் கல்வியைத் தொடரமுடியாமல், புதுக்கோட்டை அருகே அரியமளத்தில் வாழ்ந்த துறவி சிவானந்த சுவாமிகளிடம் சீடராகச் சேர்ந்து, அங்கேயே தங்கி தமிழ் இலக்கியத்திலும், வேதாந்த கல்வியிலும் தேர்ச்சிபெற்றார். இலக்கணமுத்துக் கவிராச பண்டிதரிடம் முறையாக தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றதோடு, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளைக் கற்று, பன்மொழிகளில் பாடல்கள் இயற்றுமளவிற்கு தேர்ச்சி பெற்றார்.
உள்ளூர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுமாறு வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, மாணவர்களுக்கு தமிழ் இலக்கண, இலக்கியங்களோடு, ஒழுக்கக் கல்வியும் போதித்தார். பல ஊர்களுக்கும் சென்று கம்பராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம், வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம் போன்ற இலக்கியங்களைப் பற்றி சொற்பொழிவாற்றினார். பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார்.
திறனாய்வு, வரலாறு, ஆன்மீகம், மொழி, இலக்கியம் என பல்வகை நூல்களை எழுதிய கவிராயர் வள்ளுவரையும், கம்பரையும் வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார். மதுரை மேலமாசி வீதியில் தங்கி, தாம் வசித்த இல்லத்திற்குத் "திருவள்ளுவர் நிலையம்" என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு ‘வாசுகி அச்சகம்’ என்றும் பெயரிட்டார். அச்சுக் கோர்ப்பது முதலான பணிகளைத் தாமே செய்தார். கவி புனைவதில் வல்லவரான கவிராச பண்டிதர், பெரும்பாலும் பாடல்கள் இயற்றும் புலவர்கள் அப்பாடல்களுக்கு உரை எழுதுவதில்லை; பின்னால் வரும் புலவர்களே எழுதிவந்த நிலையை மாற்றியவர். தினந்தோறும் சில மணி நேரமாவது எழுதுவது, வாசிப்பது என்ற வழக்கத்தைக் கடைசி வரை கைக்கொண்டிருந்தார்.
1330 குறட்பாக்களையும் வைத்து, மேலே இரண்டடியில் திருக்குறளின் கருத்துகளுக்குப் பொருத்தமான சரிதங்களை இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்தும், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் சேர்த்து, பொருத்தமான விரிவுரை (மாபாடியம்) செய்துள்ள கவிராச பண்டிதர், ’மனிதன் நிலை முதல் அதிகாரமாக, வீடு என்ற தலைப்பை நூறாவது அதிகாரமாக வைத்து,’ 100 அதிகாரங்களில், அதிகாரத்திற்குப் 10 பாடல்கள் வீதம் தரும தீபிகை என்ற நூலும், 60 பாடல்கள் கொண்ட அணியறுபது என்ற நூலும், கம்பன் கலைநிலை என்ற உரைநடை நூலும் எழுதியுள்ளார்.
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் என்றும் இவரது நூல் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் வரலாற்றைக் கூறுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறும் நூல் "வீரபாண்டியன்". செகவீரபாண்டியனார் பாடிய தனிப்பாடல்களின் தொகுப்பு "இந்தியத்தாய் நிலை". ஆங்கிலப் பேரறிஞர்களின் பொன் மொழிகளும் அவற்றுக்கான இணையான தமிழ் மொழிப் பெயர்ப்புக் குறட்பாக்களும் கொண்ட நூல் "உலக உள்ளங்கள்". இவர் எழுதிய "திருக்குறள் குமரேச வெண்பா" திருக்குறளை கவிதை வடிவில் விளக்கிக் கூறும் மிக முக்கியமான நூலாகும். சென்னை. மைசூர் பல்கலைக்கழகங்களில் கவிராச பண்டிதரின் நூல்கள் பாடநூலாக வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் அந்தாதி, மாசிலாமணி மலர்மாலை, அகத்திய முனிவர், அணி அறுபது, தெய்வப்புலவர் வீரகாவியம், கம்பர் கவித்துவம், முருகவேள், நமது தாய்மொழி, அரும்பொருள் அமுதம், பாரத நாட்டு வீரர், வீர தேவதை வணக்கம், உள்ளவும் உலகமும், எனது வாழ்வு, கவிகளின் காட்சி, தமிழர் வீரம், உயிரினங்கள், உளநிலை, ஒழுக்கம், கல்விநிலை, சந்தம், தாயின் தகமை, மனிதனும் தெய்வமும், மூன்று ஒலிகள், கவிகளின் காட்சி தொகுதி-1, கம்பன் கலை நிலை - உரைநடை - 15 தொகுதிகள், தரும தீபிகை - செய்யுள் மூலமும், உரையும் - 7 தொகுதிகள், திருக்குறள் குமரேச வெண்பா - செய்யுள் மூலமும், உரையும் அறத்துப்பால் - 4 தொகுதிகள், திருக்குறள் குமரேச வெண்பா - செய்யுள் மூலமும், உரையும் பொருட்பால் - 5 தொகுதிகள் பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம் - 2 பாகங்கள் என பல நூல்களை இயற்றிய செகவீரபாண்டியன் கவிராச பண்டிதர் என்று போற்றப்பட்டார்.
சக தமிழறிஞர்களால் "கவிஞர் மாமணி, கவிச்சக்கரவர்த்தி" என்று பாரட்டப்பட்டவருக்கு, மதுரை ஆதீனம் "தமிழ்மாமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். இதுதவிர, மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என பல தமிழ்ச் சங்கங்களின் பாராட்டுப்பெற்றுள்ளார். பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் என்ற நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. மதுரை பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார்.
வெள்ளையம்மாள் என்பவரை வாழ்க்கைத்துணையாகக் கொண்ட கவிராய பண்டிதருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். 1960 ஜூன் 17-இல் தனது 86 வது வயதில் இயற்கை எய்திய கவிராய பண்டிதரின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்கியது தமிழக அரசு.
தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்ச்சமூகத்திற்கும் பெருந்தொண்டாற்றியுள்ள கவிராய பண்டிதர் செகவீரபாண்டியனாரின் சிலை உரிய பராமரிப்பின்றி கிடப்பதை அரசு செப்பனிட்டுத் தரவேண்டும் என்பது இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜன சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கை.
இது சம்மந்தமாக, மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ அவர்களை சங்கத்தின் தலைவர் ம.மாரையா தலைமையிலான நிர்வாகிகள் நேற்று (10.04.2025) அண்ணாநகரிலுள்ள துரைவைகோ அவர்களைச் சந்தித்து, பண்டிதர் சிலையை செப்பனிடக்கோரி மனு அளித்தனர். தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்த துரை வைகோ அவர்கள், தேவைப்பட்டால் தாமே தன் சொந்த செலவில் செப்பனிடுவதாக உறுதியளித்தார்.
துரைவைகோவுடனான இச்சந்திப்பின்போது இராஜகம்பளம் மஹாஜன சங்கத்தின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஆலோசகர் கே.லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.