தங்கத்தில் நடந்த பரிமாற்றம் காகிதத்திற்கு மாறியதின் பின்னனி என்ன?

1944 ஆம் ஆண்டு வடஅமெரிக்க மாநிலமான நியூ ஹாம்ப்ஷயரின் பிரெட்டன் வூட்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டின் போது செய்யப்பட்ட (Bretton Woods Agreement) உடன்படிக்கையின் கீழ், பல நாடுகள் தங்களது நாணய மதிப்பை அமெரிக்க டாலருடன் இணைத்தன. அந்த டாலர் மட்டும் ஒரு உத்தேசமான தங்க மதிப்புடன் இணைக்கப்பட்டிருந்தது – அதாவது, 1 அவுன்ஸ் தங்கம் = 35 அமெரிக்க டாலர்கள்.
இதனால், அமெரிக்கா தங்களிடம் உள்ள தங்கத்திற்கு மாற்றாக, பிற நாடுகளின் நாணயங்களை டாலராகவும், பின்னர் அந்த டாலர்களை தங்கமாகவும் மாற்றி தரும் பொறுப்பில் இருந்தது.
ஆனால், வியட்நாம் போர் மற்றும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டங்களுக்காக வெறும் காகித டாலர்களை அச்சிட்டுத்தள்ளியது அமெரிக்கா.
இதன் காரணமாக டாலர் புழக்கத்தில் அதிகரிக்கத்தொடங்கியது. இதனால் டாலர் மீதான ஒரு நம்பிக்கை குறைவு ஏற்பட்டது. அந்நிய செலாவணி சந்தையில் பதட்டம் ஊடுருவியது. டாலர் மதிப்புக் குறைப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் வெளிநாடுகளில் உள்ள வர்த்தகர்களும், பல நாடுகளும் தங்களிடம் இருந்த டாலர்களை தங்கமாக மாற்றத் தயாராகின. ஆனால், அமெரிக்காவிடம் அவ்வளவு தங்கம் இல்லை. இது டாலரின் மதிப்பை மிகைப்படுத்த வழிவகுத்தது.
நிலமையைச் சமாளிக்கும் பொறுட்டு 1971-ஆகஸ்டு 15 அன்று, அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் ஒரு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, அமெரிக்கா இனி தங்களது டாலரை தங்கத்துடன் மாற்றிக் கொடுக்காது (Temporary Measure என்று கூறினாரானாலும், இது நிரந்தரமாகவே அமைந்தது).
வெளிநாட்டு முதலீட்டைத் தடுக்கவும், வெளிநாட்டுக் கடன்களைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச நாணயக் கொள்கையைச் சீர்திருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையே "Nixon Shock" என உலகம் அழைத்தது, ஏனெனில் இது ஒரு சாஹசமான, எதிர்பாராத முடிவு!
நிக்சனின் இந்த நடவடிக்கையால் Bretton Woods முறை முடிவுற்றது – நிலையான (Fixed) நாணய மாற்று விகித முறை முடிவுக்கு வந்தது.
உலக நாடுகள் அனைத்தும் நிலையான (Fixed) பணமதிப்பை விட்டு, மாறும் (Floating) நாணய மாற்று (Exchange rate) முறையை ஏற்றுக் கொண்டது.
டாலர் மற்றும் பிற நாணயங்கள் தங்கத்திற்கு அடிமையில்லை – அதன் மதிப்பு சந்தை நிலைமைகள், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வலிமை ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது.
உலக பொருளாதாரம் ஒரு புதிய யுகத்துக்கு நுழைந்தது – அதுவே இன்று நாம் உள்ளFiat Currency முறையின் தொடக்கம்.
Fiat Currency என்றால் என்ன?
Fiat Currency என்பது அரசு அதிகாரத்தின் அடிப்படையில் மதிப்பளிக்கப்பட்ட நாணயம்.
இதற்கு தங்கம் அல்லது வேறு சொத்துகளுடன் நேரடி பிணைப்பு இருக்காது.
இப்போது உலகில் பெரும்பாலான நாணயங்கள் இதுவே – ரூபாய், டாலர், யூரோ, பவுண்ட் ஆகியவை அனைத்தும் Fiat Currency.