🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாயத்தியாகி இராமசாமி சீனிகுருசாமி அவர்களுக்கு நினைவேந்தல்!

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், பர்பிள் கிளப் நன்கொடையாளரும், ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளருமான எஸ்.ஜி.இராமசாமி அவர்கள் வயது மூப்பின் காரணமாக சமீபத்தில் இயற்கை எய்தினார். இதனையடுத்து இராமசாமி அவர்கள் தனது இறுதி மூச்சுவரை உயிருக்கு உயிராக நேசித்து வளர்த்தெடுத்த இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அன்னாரின் நினைவைப்போற்றும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (22.04.2025) நடைபெற்றது. இதன் விவரம் பின்வருமாறு,   


இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் மிகமுக்கியத் தலைவராகவும், 1970-களில் தலைநகர் சென்னை நோக்கிவரும் இளைஞர்களின் சரணாலயமாகவும் விளங்கியவர் மதுரை எழுமலையைச் சேர்ந்த சீனிகுருசாமி அவர்கள். அவரது மகங்களில் ஒருவரான எஸ்.ஜி.இராமசாமி அவர்கள், இளங்கலை பட்டப்படிப்பிற்குப்பின் தமிழக காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியில் சேர்ந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிலைகளில் பணியாற்றி கூடுதல் கண்காணிப்பாளராக பணி ஓய்வு பெற்றவர். "அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை"யாக தந்தையாரைப் போன்றே சமுதாயத்தின்பால் பேரன்பும், பற்றும் கொண்ட இராமசாமி அவர்கள், தன்னுடைய பணிக்காலத்தில் மிகச்சிறந்த நேர்மையாளன் என்று காவல்துறையில் பெயரெடுத்தவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது உளவுத்துறை அதிகாரியாக இராமாவரம் தோட்டத்தில் பணியாற்றி எம்ஜிஆர் அவர்களின் அன்பைப்பெற்றவர். அதேபோல் அலெக்ஸாண்டர் அவர்கள் தமிழக டிஜிபியாக பொறுப்புவகித்தபோது சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம் போன்ற பிரச்சினைகள் எழும்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அந்தந்தப்பகுதிக்கு டிஜிபியால் அனுப்பிவைக்கப்படும் முதல் நபர் எஸ்.ஜி.இராமசாமி. காவல்துறை அதிகாரியாக தமிழகத்தில் எந்த மூளை முடுக்குக்குச் சென்றாலும் கம்பளத்தார் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக தேடிச்சென்று  உதவி செய்பவர் என்பது பலராலும் நினை கூறப்படும் உண்மை.


தன்னுடைய பணிக்கால ஓய்விற்குப்பிறகு சுமார் கால்நூற்றாண்டுகாலம் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க உருவாக்கத்திலும், தலைமையகக் கட்டுமானத்திற்கும், சங்க வளர்ச்சிக்கும் இடையறாது பாடுபட்டு வந்தவர் எஸ்.ஜி.இராமசாமி அவர்கள். இறுதி ஐந்தாண்டுகாலம் கடுமையான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சைபெற்று வந்தநிலையிலும், சங்கக்கூட்டங்களில் தவறாது கலந்துகொண்டவர் இராமசாமி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னையில் சமுதாயத்திற்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கும் முனைப்பில், தன் சொந்தக்காசை செலவு செய்து மாநிலம் முழுவதும் சுற்றிவந்து கட்டட நிதிதிரட்டி, மாவீரன் கட்டபொம்மன் அகாடமியை உருவாக்குவதில் முக்கியப்பங்காற்றியதோடு, எப்போதெல்லாம் நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தன் சொந்தக்காசை வாரிக்கொடுப்பதற்கு என்றும் அஞ்சாதவர். மேலும், குடும்பத்தில் தான் மட்டும் உதவினால் போதாதென்று அமெரிக்காவில் வசிக்கும் இரு மகள்களிடமும் நன்கொடைபெற்று, அவர்களையும் சமுதாயத்தின்பால் அக்கறை கொள்ளச்செய்தவர்.

தனது இறுதிகாலம் வரை எளிமையோடும், உயர்ந்த லட்சியத்தோடும், சமுதாயத்தின் மீதான அக்க்றையோடும் வாழ்ந்த இராமசாமி அவர்கள் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வயது மூப்பின் காரணமாக, சென்னையில் காலமானார். இதனையடுத்து அவரது இறுதிகாலம் வரை நினைவில் சுற்றிச்சுழன்ற சங்கக்கட்டிடத்தில் அவரது சமுதாயப்பணிகளை நினைவுகூர்ந்து போற்றும் வகையில், நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (22.04.2025) காலை, சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, புகழ் விளக்கேற்றி, மலர்தூவி மரியாதை செய்தனர். இதனையடுத்து தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் ஆர்.பெருமாள், அமைப்புச்செயலாளர் ஆர்.சுந்தர்ராஜ், ஆலோசகர்கள் கே.லோகநாதன், ஆர்.முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் டி.சுப்பிரமணியன் ஆகியோர் அன்னாரின் சமுதாயப்பணிகளை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.

மேலும் இக்கூட்டத்தில் ஆறுமுகச்சாமி, சுப்பிரமணியம், சிவசங்கர், காளிமுத்து, பாண்டியன், பழனிச்சாமி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved