திமுக இளைஞரணி நிர்வாகிகளாக சந்திரசேகர், கார்த்தி ஆகியோர் நியமனம்!

2026 இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும்கட்சியான திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதனொருபகுதியாக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை செயலாளராகக்கொண்டு செயல்பட்டு வரும் திமுகவின் மிகமுக்கிய துணை அமைப்புகளின் ஒன்றான இளைஞரணியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 41 கழக மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் அடங்கிய புதிய நிர்வாகிகள் பட்டியல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் நேற்று (28.04.2025) வெளியாகியுள்ளது.
இளைஞரணி புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு, தேர்வு குறித்து இளைஞரணிச் செயலாளரும், துணைமுதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரியபரிந்துரைகள், நேர்காணலில் பெற்ற தரவுகள், கட்சியில் தற்போதைய செயல்பாடுகள் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதனடிப்படையில், கோவை தெற்கு மாவட்டம் ஒடையகுளம் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளராக ஆனைமலை அருகேயுள்ள சின்னப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த த.சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளங்கலை பட்டதாரியான சந்திரசேகர் இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோவை தெற்கு மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் குறிச்சி தெற்குப்பகுதி துணை அமைப்பாளராக ஈச்சனாரி கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதுகலை பொறியியல் பட்டதாரியான கார்த்திக் பாரம்பரிய திமுக குடும்ப உறுப்பினராக, தகவல் தொழில்நுட்ப அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துவ தத்துவங்களையும், கோட்பாடுகளையும் மையமாகக்கொண்டு , சித்தாந்த வலிமையுடன் இயங்கும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதிப்புமிக்க துணை அமைப்பான இளைஞரணியில், அமைப்பாளர் பொறுப்பினைப் பெற்றுள்ள சந்திரசேகர், கார்த்திக் ஆகியோர் அறிவார்ந்த விவாதங்களில் தங்களை வலிமைப்படுத்திக்கொண்டு, கட்சியில் மேன்மேலும் உயர சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.