கம்பளத்தார் இல்லத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்!
தமிழ்நாட்டில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் நிகழ்வுக்கு சித்திரைத் திருவிழா என்று பெயர்.
சைவமும், வைணவமும் இணைந்து மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. மதுரையை ஆட்சிசெய்த மாமன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சைவத்திருவிழாவான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வையும், வைணவத்திருவிழாவான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நிகழ்வையும் இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். அதுமுதல் பலநூற்றாண்டுகள் கடந்தும் இன்றுவரை சித்திரைத்திருவிழா மதுரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூர் இல் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்று வருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம் என்று சொல்லப்படுகிறது.
வைணவர்களின் பாண்டி நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று திருமாலிருஞ்சோலை. இங்கு எழுந்தருளி இருப்பவர் சுந்தரராஜப் பெருமாள்.மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலுள்ள திருமாலிருஞ்சோலையிலிருந்து (அழகர் கோவில்) ஒவ்வொரு ஆண்டும், சுந்தரராஜப்பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி, மண்டூக முனிவரின் சாபத்தைப் போக்கித் திரும்புவதாக ஐதீகம். இதுவே சித்திரைத் திருவிழாவாக நடக்கிறது.
பெருந்தெய்வமான சுந்தரராஜப்பெருமாள் தன்னுடைய ஐதீகக்கோலத்துடன் அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை வருவதில்லை. ஒரு கையில் வளரித்தடி, மற்றொருகையில் சாட்டைக்கம்பு, தலையில் கொண்டை, காதில் கல்வைத்த கடுக்கண், அரைக்கால் அளவும், இடுப்புக்கு மேலேயும் கருப்புநிற ஆடை என கள்ளர் கோலத்தில்தான் மதுரை வருகிறார்.

அதே நேரத்தில், கள்ளர் கோலத்துடன் மதுரைக்குள் நுழைவதில்லை. தல்லாகுளம் வந்தவுடன் கள்ளர் கோலத்தைக் கலைத்துவிட்டு, பெருந்தெய்வ வேடமணிந்து வைகை ஆற்றிக்குச் செல்கிறார். அதேபோல் தல்லாகுளம் வரை வந்து, மீண்டும் கள்ளர் வேடம் அணிந்து அழகர்கோவிலுக்கு திரும்புகிறார்.
இத்திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வு கள்ளழகர் மண்டகப்படி. கள்ளழகர் அழகர் கோயிலிருந்து மதுரைக்கு வரும்போது, வழிசெல்லும் ஊர்களில் உள்ள மண்டகப்படி என்ற இடங்களில் பக்தர்கள் அழகரை வைத்து வழிபடப்படும் நிகழ்வே மண்டகப்படி. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன், 470-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளி காட்சி தருகிறார். மண்டகப்படி உள்ள இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு சென்று, பக்தர்கள் பூசைகள், பாடல்கள், மற்றும் பல வழிபாட்டு முறைகளை செய்வார்கள். இந்த உரிமையை பொதுவாக ஒரு குடும்பம் அல்லது குழு ஒன்று பெற்று, அந்த மண்டகப்படிக்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறது.

மண்டகப்படி உரிமைகளை வழங்குவதில், கோவில் நிர்வாகம் சில முறைகளை பின்பற்றும். உதாரணமாக, சில மண்டகப்படிகளுக்கு, கோவில் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து, அந்த தொகையை செலுத்தும் நபருக்கு உரிமையை வழங்கும். சில மண்டகப்படிகளுக்கு, கோவில் நிர்வாகம் ஏலத்தின் மூலம் உரிமையை வழங்கும். மேலும், சில மண்டகப்படிகளுக்கு, கோவில் நிர்வாகம், அந்த மண்டகப்படிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் குழுவுக்கு உரிமையை வழங்கும்.
மண்டகப்படி சம்மந்தமாக 19 ஆம் நூற்றாண்டிலிருந்து பல வழக்குகள் நடைபெற்றுள்ளன. மதுரை அழகர்கோவில் தர்மகர்த்தா வழக்கு, மீனாட்சி அம்மன் கோவில் தர்மகர்த்தா வழக்கு, மதுரை ஆதீய்னம் வழக்கு, தனியார் தர்மகர்த்தாக்கள் வழக்கு என மண்டகப்படி உரிமம் சம்மந்தமாக ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்துள்ளது.
துரதிஷ்டவசமாக மதுரையில் நாயக்கர் ஆட்சி அமைய முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்கிய இராஜகம்பளத்தார் சமூகத்திற்கோ அல்லது குழுவிற்கோ, குடும்பத்திற்கோ மண்டகப்படி உரிமம் இல்லாமல் இருந்துவந்தது. இந்நிலையில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஸ்ரீவிநாயகா குரூப் சேர்மனுமான திரு.மணிவாசகன் அவர்களின் கடும்முயற்சியின் விளைவாக கடந்த ஆண்டு (2024) இல் சித்திரைத்திருவிழா மண்டகபடி உரிமை பெற்றார். கடுமையான போட்டிகள், அரசியல் தலையீடுகள், நீதிமன்ற குறுக்கீடுகள் பல தாண்டி ரூ.10 லட்சம் செலுத்தி மண்டகப்படி உரிமையைப் பெற்றார். இதனையடுத்து கடந்தாண்டு சித்திரைத்திருவிழாவின் போது மதுரை அழகுராஜா நகர் முதலாவது தெரு, சூர்யா நகரிலுள்ள ஸ்ரீ விநாயக இல்லத்தில் கள்ளழகர் தங்கப்பல்லக்கு / குதிரையில் வந்து எழுந்தருளினார். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.05.2025) அதிகாலை 3.30 மணியளவில் இரண்டாவது ஆண்டாக கள்ளழகர் மணிவாசகன் அவர்களின் இல்லத்தில் எழுந்தருளினார்.
முன்னதாக இரண்டாவது ஆண்டு மண்டகப்படியன்று கள்ளழகரின் விஜயத்திற்காக மணிவாசகன் குடும்பத்தினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்களும், முக்கியப்பிரமுகர்களும் கலந்துகொண்டு அழகரை தரிசித்தனர்.

