🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தடைகளைத் தகர்த்தெறிந்து வெல்லும் தனலட்சுமி!

முடியாட்சியில் பல சிற்றரரசுகளையும், பேரரசுகளையும் அரசாட்சி செய்து கோலேச்சிய சமூகத்தினர் தொட்டிய நாயக்கர் என்பது கடந்த கால வரலாறு. சுதந்திரத்திற்குப்பிந்தைய மக்களாட்சி ஜனநாயகத்தின் துவக்கநிலையில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த ஜமீன்தார்களில் ஒருசிலர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சிப்போக்கில் தேர்தல் அரசியலை எண்ணிக்கை பலம் தீர்மானிக்கத் தொடங்கிய பின் ஒட்டுமொத்த அரசியல் போக்கும் மாறிப்போனது. 


எனினும், எண்ணிக்கை பலம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தபோதும், பொருளாதார வளர்ச்சி, நவீன அரசியலின் போக்கை கவனிக்கத்தவறியதின் விளைவாக, அரசியல் களத்தில் கம்பளத்தார்களின் இருப்பு கேள்விக்குறியானது. விதிவிலக்காக தனது தனித்துவமான ஆளுமையால் அரசியல் அரங்கில் தனிமுத்திரை பதித்தவராக மிளிர்ந்தவர் அமரர் க.சுப்பு மட்டுமே. அரசியலையும்,  கம்பளத்தாரையும் இணை பிரிக்கமுடியாத அளவிற்கு மற்ற எல்லாச் சமூகங்களைக் காட்டிலும் அரசியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலாக தலைமைகளிடம் செல்வாக்கு செலுத்தக்கூடிய வாய்ப்பு யாருக்கும் கைகூடவில்லை.

1996-க்குப்பின் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தல்கள் கம்பளத்தாருக்கான அரசியல் கதவுகளை சற்று பிரகாசமாகியது என்றே குறிப்பிடலாம். போட்டி நிரம்பிய அரசியலில் தட்டுத்தடுமாறி முன்னேருபவர்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளவே போராடி வருகின்றனர். தன்மானமிக்க, சுயமரியாதை எங்கேயும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாத கம்பளத்தாரின் இயல்புக்கு ஏற்றவகையில் இன்றை அரசியல் நிலைமை இல்லை. வாள் பிடித்து வென்ற சமுதாயத்தால் வால் பிடித்து வாழமுடியவில்லை. இதனாலேயே பெரும்பாலான தலைவர்களால் அடுத்தகட்டத்திற்கு உயரமுடியவில்லை.


திமுக-வில் சாதாரண கிளைச்செயலாளர் பொறுப்பு வாங்குவதே சிரமமாக இருக்கும் நிலையில், தனது தனித்துவமான அரசியலால் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்  திருமதி.தனலட்சுமி. இதன் விவரம் வருமாறு, 

இடதுசாரி அரசியல் பின்புலமுள்ள குடும்பத்திற்கு வாக்கப்பட்டு, திராவிட தத்துவத்தைக் கைக்கொண்டு  குன்னத்தூர் பேரூராட்சி மன்ற உறுப்பினரானவர் திருமதி.தனலட்சுமி இராஜேந்திரன். சிறந்த களப்பணியாளராக, முற்போக்கு சிந்தனையாளராக பார்க்கப்படும் தனலட்சுமி, தொடர்ச்சியான அரசியல் பணிகளால் கட்சியிலிருந்து ஒதுக்கமுடியாத தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். இதன் பலனாக ஈரோடு மத்திய மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளராக தனலட்சுமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சரும், அக்கட்சியில் மாவட்டச் செயலாளருமான தோப்பு வெங்கடாச்சலம் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றார் தனலட்சுமி. இதற்கிடையே, கடும் போட்டிக்கும், நெருக்கடிக்கும் மத்தியில் திமுக-வின் மாவட்ட அளவிலான பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தனலட்சுமி அவர்களுக்கு  சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சிப்பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved