நீதிமன்ற தீர்ப்பு வரை இடஒதுக்கீட்டை நிறுத்துக! அமைச்சரிடம் கோரிக்கை!
சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் 3000-க்கு காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 08/2021 சட்டத்தை பின்பற்றாமல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கும் முந்தைய சட்டத்தின் அடிப்படையிலேயே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வன்னியர்க்கு உள்ஒதுக்கீடு வழங்கும் 08/2021சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், மராத்தா இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை கருத்தில் கொண்டும் இந்த அறிவிப்பானை வெளியாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நீதிமன்ற பணியிடங்களை நிரப்புவதிலேயே தற்போதைய உள்ஒதுக்கீடு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதிவாளர் தயக்கம் காட்டுவது, இச்சட்டத்தின் உறுதித்தன்மை மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறான நிலையில் பள்ளி,கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறையையே கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.