குமாரசாமி ராஜா-வின் 123-வது பிறந்தநாள் விழா - விடுதலைக்களம் அழைப்பு.
Thottianaicker
Jul 07, 2021
பூசாபதி சஞ்சீவி குமாரசுவாமி ராஜா (1898–1957) சென்னை மாகாண முதலமைச்சராக ஏப்ரல் 6, 1949 முதல் ஏப்ரல் 10, 1952 வரை பொறுப்புவகித்தவர். இவர் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தவர்.
இளமை வாழ்வு:
பூசாபதி சஞ்சீவி ராஜாவிற்கு மகனாக இராஜபாளையத்தில் பிறந்தார். தனது தாயை பிறந்த எட்டு நாட்களிலேயே இழந்தார். தந்தையை மூன்றாம் வயதில் இழந்தார்.உடன்பிறப்புகள் யாருமில்லாத குமாரசாமியை அவரது பாட்டியார் வளர்த்து வந்தார். பதினைந்தாம் நூற்றாண்டில் ஆந்திராவிலிருந்து இடம் பெயர்ந்த வீரர்கள் பரம்பரையைச் சேர்ந்த தெலுங்கு மொழிபேசும் ராஜூக்களின் இனத்தைச் சேர்ந்தவர்.தமது பள்ளிக்கல்வியை முடித்தவுடன் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பல்வேறு நிலைகளில் பங்காற்றி இருக்கிறார். கிராமத்தின் பஞ்சாயத்து அமைப்புகளில் நாட்டம் கொண்டு பஞ்சாயத்து மற்றும் நகரவை நிர்வாகங்களில் பங்கேற்றார்.
அரசியல் மற்றும் சமூக சேவை:
அவரது இளம்வயதில் அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரது வாழ்வும் எழுத்துக்களும் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருந்தன. 1919ஆம் ஆண்டு முதன்முதலாக காந்தியை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார்.காந்தியின் தென்னாபிரிக்கா போராட்டங்களையும் அகமதாபாத்தில் அவர் நிறுவிய ஆசிரமும் அவரது எளிமையும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது.
1932ஆம் ஆண்டு நீதியற்ற சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் சிறை சென்றார். 1934ஆம் ஆண்டு திருநெல்வேலி,மதுரை மற்றும் இராமநாதபுரம் அடங்கிய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்.
1949 முதல் 1952 வரை தமிழ்நாடு (சென்னை மாகாணம்) முதலமைச்சராகவும் 1954 முதல் 1956 வரை ஒரிசா ஆளுநராகவும் பணியாற்றினார். அவரது பணிக்காலத்தில் மதுவிலக்கு, காதித்துணிகளுக்கு ஆதரவு மற்றும் ஆலயப்பிரவேச ஆணை ஆகியன குறிப்பிடத்தக்கன.தமது வீட்டை காந்தி கலைமன்றம் என்ற நுண்கலை அமைப்பிற்கு நன்கொடை அளித்தார்.
நினைவுச் சின்னங்கள்:
இவரது நினைவைப் போற்றும் வகையில் இந்திய நடுவணரசு இவர் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது. புதியதாக உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், அதைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட நகருக்கும் இவர் பெயரைச் சூட்டியுள்ளனர்.
இவரின் 123வது பிறந்தநாளையொட்டி இராசிபுரத்தில் அமைந்துள்ள விடுதலைக்களம் கட்சியின் தலைமையகத்தில் நாளை காலை (08.07.2021) 10-மணியளவில் குமாரசாமி ராஜா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு அனைவருக்கும் விடுதலைக்களம் அழைப்புவிடுத்துள்ளது.