பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு சமூகநீதிக்கூட்டமைப்பு வேண்டுகோள்
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு சமூகநீதிக்கூட்டமைப்பு வேண்டுகோள்!
மதிப்பிற்குரிய அய்யா,
115 MBC/DNT சமூகங்களின் அரசமைப்பு சட்ட உரிமைகளைப் பறிக்கும் வண்ணம், எடப்பாடி அரசு MBCயில் ஒருசாதிக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டவிரோதச் சட்டத்தைக் கொண்டு வந்ததுள்ளது. அதைச் சட்டப்படி செயல்படுத்தச் சாத்தியமில்லை. அது சட்டமே இல்லை. அதிகாரமே இல்லாமல் போடப்பட்ட சட்டம். அடிப்படையே இல்லாமல் போடப்பட்ட சட்டம். பொய்சொல்லி மோசடியாகப் போடப்பட்ட சட்டம். இருப்பினும் அநீதியான, கண்மூடித்தனமாக, வாக்களித்த மக்களைத் தொடர்ந்து வஞ்சிக்கும் கொடூரமான அரசியல் அழுத்தம் காரணமாக தமிழ்நாடு தேர்வாணையம் மேற்படி மோசடிச் சட்டத்தைச் செயல்படுத்த முயல்வதாக அறிந்து, 115 சமூகங்கள் அதிர்ந்து போனோம். நாங்கள் நேரில் வந்து மேற்சொன்ன விபரங்களை விளக்க விரும்புகிறோம். மேலும் கீழ்கண்ட அசைக்கமுடியாதச் சட்டக் காரணங்களுக்காகத் தயவுசெய்து நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை இப்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையையே தொடரவேண்டும்.
69% இடஒதுக்கீடு வழங்கும் தாய் சட்டம் 45/1994 அரசமைப்பு சட்டம் சரத்து 31Bயின் கீழ் 9வது அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சரத்து 31Cயின் கீழ் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று இரட்டைப் பாதுகாப்புடன் MBCக்கு 20% இடஒதுக்கீடு வழங்குகிறது. அச்சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யவில்லை. எனவே, தேர்வாணையம் சட்டம் 45/1994ன்படித் தொடர்ந்து MBCக்கு 20% இடஒதுக்கீடுதான் வழங்க முடியும்.
உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் அந்த அடிப்படையற்ற அநீதியான சட்டத்தைத் எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டு அரசுக்கு அறிவிப்புக் கொடுக்கப்பட்டு, தடைகோரும் மனுக்கள் நிலுவையில் உள்ளது. உயர்நீதிமன்றப் பணி நியமனத்தில் அச்சட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று உறுதிப்படுத்தியுள்ளது. அதேநிலையைத்தான் அரசின் மற்ற துறைகளும் எடுக்கமுடியும். ஆனால் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மேற்படி MBC உள்ஒதுக்கீட்டுச் சட்டத்தைச் செயல்படுத்த முயல்வது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். ஏனென்றால், உச்சநீதிமன்றம் மராத்தா வழக்கில் தமிழக அரசையும் வழக்கில் சேர்த்து 5.5.2021ம் தேதி இறுதித் தீர்ப்பில் மாநில அரசுக்கு இதுபோன்றுப் பிற்படுத்தப்பட்டோரை வகைப்படுத்த அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. மறுசீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது
எனவே 19.7.2021ல் அன்று எங்கள் பிரதிநிதிகள் தங்களை சந்திக்க நேரம் வழங்குமாறு, அதுவரை இடஒதுக்கிட்டில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று 115 சமூகங்கள் சார்பாக மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
115 MBC/DNTசமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு.