இடஒதுக்கீடு விவகாரத்தில் கட்சிகளின் ஆதரவுகேட்டு சமூகநீதி கூட்டமைப்பினர் சந்திப்பு!
வன்னியர் உள்ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட 115 சமூகங்கள் ஒன்றிணைந்து "சமூகநீதி கூட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதைத் தொடர்ந்து, 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. இக்கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி தங்கள் பிரச்சினைகளையும், பாதிப்புகளையும் பட்டியலிட்டதைத் தொடர்ந்து, அச்செய்தி அனைத்து ஊடகங்களிலும் பிரதான இடம்பிடித்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (18.07.2021) தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமியின் உருவபொம்மை எரிக்கும் போராட்டம் ஈடுபட்டனர். பல இடங்களில் நடைபெற்ற இப்போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப்பட்டதோடு, அரசியல் அரங்கிலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழகம் முழுவதும் பலர்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாளை 20.07.2021 சென்னையில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள சமூகநீதி கூட்டமைப்பினர், சென்னையில் முகாமிட்டு பிரதான கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இன்று காலை வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.முனுசாமிக்கவுண்டர், மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினி, கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.அன்பழகன், திரு.இராமமூர்த்தி, தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.செந்தில்குமார் இராமராஜ் ஆகியோர் திராவிட கழக துணைத்தலைவர் திரு.கலிபூங்குன்றனை சந்தித்து ஆதரவு திரட்டினர். அதையடுத்து பாரதிய ஜனதா, மதிமுக, விசிக, ம.கம்யூ, இ.கம்யூ கட்சி அலுவலகங்களுக்குச் சென்று ஆதரவு திரட்டினர்.