குழுவாக இயங்கத்தெரியாதவர்கள் கம்பளத்தார்கள்! - மூத்த பத்திரிக்கையாளர் கருத்து.
வன்னியர் உள்ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 115 சமுதாயங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் மாவட்ட வாரிய 115 சாதியினரையும் ஒருங்கிணைக்கும் கூட்டம் நேற்று தமிழகமெங்கும் நடைபெற்றது.
திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை, ஈரோடு, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டங்களில் ஆண்டிப்பண்டாரம், கொங்கு செட்டியார்கள், வண்ணார், முத்தரையர், முக்குலத்தோர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிக்கவுண்டர் உள்ளிட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் நாமக்கல், சென்னை தவிர்த்த பெரும்பாலான மற்றமாவட்டங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இக்கூட்டத்தில் பேசிய பலரும் அவசர அவசரமாக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் சில சமூகங்கள் கலந்து கொள்வதில் சிரமம் இருந்ததாகவும், அடுத்தடுத்த சந்திப்புகளில் அனைத்து சமுதாய பிரதிநிதிகளையும் கூட்டத்தில் பங்குகொள்ளச் செய்யவேண்டும் என்று வலியுறுத்திப்பேசினர். அப்பொழுது 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரந்துபட்டிருக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரை அழைத்துவரவேண்டும் என்றார் ஒருவர்.
அப்பொழுது குறுக்கிட்ட மூத்தபத்திரிக்கையாளரும், சமூகங்களின் பழக்கவழக்கங்களை ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர் எழுந்து "அந்த அக்னி பரிட்சையில் யாரும் ஈடுபடவேண்டாம் " என்றார். ஒரு சமூகம் குறித்து மேடையில் பேசுவது அழகல்ல என்றவர், கூட்டம் முடிந்து மேடையைவிட்டு இறங்கி செல்லும்பொழுது நிர்வாகிகள் அதற்கான விளக்கத்தை அவரிடம் கேட்டனர்.
ஒரு சமூகத்தை தவறாக சொல்றேன்னு யாரும் நினைக்காதீங்க, ஒரு ஆய்வாளர் என்றவகையில் நான் பார்த்தவகையில் சொல்றேன், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் இந்த மண்ணின் மூத்தகுடி, பாளையங்களை உருவாக்கி ஆட்சி செய்தவர்கள். நல்ல மனிதர்கள், பிற சமுதாயத்தினரிடம் விசுவாசமாக இருப்பவர்கள். இப்படி எத்தனையோ நல்ல விஷயம் இருந்தாலும் நவீன காலத்திற்கேற்ப தங்கள் சமூகத்தில் மாறுதலை செய்துகொள்ளும் பார்வை இல்லாமல் இருப்பதும், சமுதாயம், அரசியல், தொழில் என எந்த துறையில் எடுத்தாலும் தனித்து இயங்குவார்களே தவிர குழுவாக இயங்கத் தெரியாதவர்கள். ஒருசில அடிப்படை விசயங்களைக்கூட தெரிந்துகொள்ளாமல், ஆண்டபரம்பரை கதைசொல்லிகளாகவும், கட்டபொம்மன் படத்தை வாட்ஸ் அப் பேஸ்புக்களில் ஷேர் செய்து தங்கள் சாதிப்பற்றை வெளிப்படுத்திக்கொள்கிறார்களே தவிர ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதில்லை. இந்த இடஒதுக்கீடு குறித்தெல்லாம் படிச்சவங்களுக்கோ, அமைப்புகளை நடத்துறவங்களுக்கே கூட ஏதும் தெரியாது. தமிழகத்தில் ஆர்கனைஸ்டா இல்லாத சமூகங்களில் தொட்டிய நாயக்கர் சமூகம் முதன்மையானது. அதனால் தான் விழிப்புணர்வு உள்ள சாதிகளை வைத்து முன்னெடுப்போம், அவர்கள் வந்தால் பின்னால் இணைத்துக் கொள்ளலாம் என்றார்.
நாம் பயணப்பட வேண்டிய தூரம் மிக அதிகம் என்பது தெரிகிறது.