🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பாஞ்சை வீரசக்கதேவி ஆலய சித்திரைப் பெருவிழா கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமான அன்னை வீரசக்கதேவி ஆலயத்தின் 70 ஆண்டு சித்திரைப்பெருவிழா நாளை மே 8ஆம் நாள் தொடங்கி 10 ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முன்னோட்டமாக கடந்த 1 ஆம் தேதி கால்நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் விவரம் வருமாறு,

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமும், தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான இராஜகம்பள சமுதாய மக்களின் இஷ்ட தெய்வமாகவும் பாஞ்சாலங்குறிச்சி அன்னை வீரசக்க தேவி இருந்து வருகிறாள். பல நூற்றாண்டுகளாக சித்திரை மாத கடைசி வாரத்தில் கொண்டாடப்பட்டு வரும் சித்திரைத் திருவிழா, சுதந்திரத்திற்குப்பின் 1957இல் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இராஜகம்பள சமுதாயத்தினர் ஜோதி ஏந்தியும், முளைப்பாரி எடுத்துவந்தும் அன்னையை வழிபட்டுச் செல்வது வாடிக்கையாக இருந்துவருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த சித்திரைத் திருவிழா 70 ஆண்டை நிறைவு செய்யவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் இத்திருவிழாவை சீரும் சிறப்புமாக நடத்த வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவ்விழாவில் கம்பளத்தாரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விழாவுக்கு வரும் பெருந்திரளான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் குளியல் அறை, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை விழாக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு மேற்கொண்டுள்ளனர். இராஜகம்பள சமுதாய மக்களின் ஒற்றை அடையாளமாக விளங்கும் அன்னை வீரசக்கதேவி ஆலய சித்திரைத் திருவிழாவிற்கு சமுதாய மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்த்கொண்டு அன்னை அருள் பெற்றுச்செல்லுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved