பண்பாட்டுக்கழகத்தின் மூத்த தலைவர் யுனிவர்சிட்டி ராஜு இயற்கை எய்தினார்!
பண்பாட்டுக் கழகத்தின் மூத்த முன்னோடித் தலைவர் திரு.ராஜு மறைந்தார்!
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மூத்த முன்னோடித் தலைவர்களில் ஒருவரான யுனிவர்சிட்டி ராஜு என்றழைக்கப்படும் பி.ராஜு M.A., அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார். அன்னாரது மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் சீலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.இராஜு. எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராஜு அவர்கள் முதுகலைப் பட்டம்பெற்று மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சீனியர் சூப்ரண்டாகப் பணியாற்றி கடந்த சில வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்று மதுரை பழங்காநத்தத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
1960-களில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் பட்டப்படிப்பு முடித்த ஒருசிலரில் ராஜு அவர்கள் முதன்மையானவர். இதனால் பட்டம்பெற்று பணியில் சேர்ந்தாலும் கல்வியறிவற்ற கம்பளத்தார் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் கற்றரிந்த பெருமக்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் எனும் பேரியக்கத்தை உருவாக்க விதைபோட்ட முன்னோடிகளில் ஒருவர் திரு.ராஜு. த.வீ.க.பண்பாட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும் பதவி வகித்து பண்பாட்டுக் கழகத்தை கிராமங்கள்தோறும் கொண்டு சேர்த்து வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்தவர். புகழ்பெற்ற மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காரணத்தால் சமுதாய மக்களால் யுன்வர்சிட்டி ராஜு என்று அடையாளப் படுத்தப்படுபவர், பணிநிறைவு பெற்றபின்பும் சமுதாயப்பணிக்கு ஓய்வுகொடுக்காமல் உழைத்தவர் திரு.ராஜு என்றால் மிகையல்ல.
இந்நிலையில் தனது ஒரு மகன் மற்றும் மனைவியோடு மதுரை பழங்காநத்தத்தில் வசித்துவந்த ராஜு அவர்கள் நேற்று (10.09.2025) மாலை 7 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அனுதினமும் ஏதாவது ஒரு சமுதாயத் தலைவர்களோடு தொலைபேசிவாயிலாக சமுதாய சம்மந்தப்பட்ட உரையாடல்களை நிகழ்த்திவந்த திரு.ராஜு அவர்களின் திடீர் மரணச்செய்தி அவரோடு நெருங்கிப்பழகிவந்த சமுதாய உறவுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் இறப்பு சமுதாயத்திற்கு பேரிழப்பு என்று தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
திரு.ராஜு அவர்களின் மறைவுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மண்ணில் த.வீ.க.பண்பாட்டுக்கழகம் என்ற ஆலமரத்திற்கான விதையை ஊன்றி வளர்த்தெடுத்ததில் முக்கியப்பங்கு வகித்த இராஜு அவர்களின் மறைவால் இராஜகம்பள சமுதாயம் தனது ஆணிவேரில் ஒன்றை இழந்துவிட்டது. அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், த.வீ.க.பண்பாட்டுக் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கல்வி அறக்கட்டளையின் செயலாளர் வை.மலைராஜன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதிக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜு, கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் யுனிவர்சிட்டி ராஜு அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

