பண்பாட்டுக்கழக மாநிலப் பொதுச்செயலாளர் தந்தையார் மறைவுக்கு இரங்கல்!
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.க.இராமகிருஷ்ணன் அவர்களின் தந்தையார் திரு.கருப்பசாமி நாயக்கர் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இதனையடுத்து, அன்னாரின் மறைவுக்கு சமுதாயத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு,
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் 'தளி'யை அடுத்த ஜல்லிபட்டியைச் சேர்ந்தவர் திரு. கருப்பசாமி நாயக்கர். தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநிலப் பொதுச்செயலாளரும், திருப்பூர் அகில் பேக்கேஜிங் நிறுவன உரிமையாளரும், தொமுச தொழிற்சங்கத் தலைவருமான திரு.க.இராமகிருஷ்ணன் அவர்களின் தந்தையாரான கருப்பசாமி நாயக்கர், தனது பூர்வீக கிராமத்தில் விவசாயம் மேற்கொண்டுவந்தார். வயது மூப்பினால் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (24.02.2026) செவ்வாய்கிழமை மாலை 5.00 மணியளவில் ஜல்லிபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச்சடங்கு இன்று (புதன்கிழமை) நடைபெறுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திரு.கருப்பசாமி நாயக்கர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன், "இராஜகம்பள சமுதாயத்திற்கு போர்க்குணமிக்க செயல்வீரரை வழங்கிய கருப்பசாமி நாயக்கர் அவர்களின் புகழ் கம்பளத்தார் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். தந்தையை இழந்துவாடும் பண்பாட்டுக் கழக மாநிலப் பொதுச்செயலாளர் திரு.இராமகிருஷ்ணன் மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக" குறிப்பிட்டுள்ளார். அதேபோல், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதிக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ், கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் ஆகியோர் கருப்பசாமி நாயக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

