இரட்டைப் பரிசு! இரட்டிப்பு மகிழ்ச்சியில் கம்பளத்தார்கள்!- முதல்வருக்கு நன்றி.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இன்று (07.09.2021), செய்தித்துறை மீதான மானியக் கோரிக்கையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசினார். இதனைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கம்பளத்தார்களின் மிகநீண்டகால கோரிக்கையான மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னை, கிண்டியிலுள்ள மகாத்மா காந்தி மண்டப வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.
அதேபோல் ஆங்கிலேயரை எதிர்த்துபோராடி உயிர்நீத்த பாளையக்காரரான தளி எத்திலப்ப நாயக்கருக்கு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 2.60 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இக்கோரிக்கையும் மிகநீண்டகாலமாக தமிழக அரசிடம் வைக்கப்பட்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட முன்னேற்றக்கழக அரசு அமைந்தபிறகு செய்தித்துறை அமைச்சர்.சாமிநாதன் அவர்களிடன் த.வீ.க.பொ.பண்பாட்டுக் கழகத்தின் ஆலோசகர் திருப்பூர்.இராமகிருஷ்ணன் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், அதனையடுத்து இந்த அறிவிப்பு இந்த சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.இராமராஜ் தெரிவித்தார்.
ஒரே சமயத்தில் கம்பளத்தாருக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூர்.இராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர். அவருடன் கட்டபொம்மன் குளோபல் பவுண்டேசன் செந்தில்குமார், த.வீ.க.பொ .நிர்வாகிகள் ஆனந்தபூபதி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகம் முழுவதுள்ள கம்பளத்தார்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். இரட்டைப்பரிசை ஒரே நேரத்தில் வழங்கியுள்ள தமிழக முதல்வருக்கும், பல்வேறு காலகட்டங்களில் இதே கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பிய முன்னாள் அமைச்சர் கடம்பூர்.இராஜு, மு.சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோருக்கும் கம்பளத்தாரின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.