கேரள மாநிலத்தில் சாதனை படைத்த மாணவ-மாணவியருக்கு பரிசு!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர், மேனாம்பாறை, கோவில்பாளையம், மழம்புலா, நெய்தலை, எடுப்புக்குளம், கொட்டக்காடு, புதுச்சேரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர்.
நூற்றாண்டுகளுக்கும் மேலாக கேரள மாநிலத்தில் வசிக்கும் கம்பளத்தார் சமுதாயத்தினரின் கொள்வினை கொடுப்பினை பெரும்பாலும் பாலக்காடு மாவட்ட எல்லையான கோவை மாவட்ட கம்பளத்தாரோடு நடைபெற்று வருகிறது. பாலக்காடு மாவட்ட கம்பளத்தார்கள் இணைந்து இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தை நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4.12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதையடுத்து தேர்வு முடிவு கடந்த 13.07.2022 (புதன்கிழமை) பிற்பகலில் வெளியானது.
இதில் அதிக மதிப்பெண் பெற்ற கம்பளத்தார் சமுதாய மாணவ-மாணவியருக்கு அம்மாநில இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் வீடுதேடிச்சென்று பரிசுகளை வழங்கினார். பரிசுகளைப் பெற்றுக்கொண்ட மாணவ-மாணவியர் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொடர்ந்து சிறப்பாக திறமையை வெளிப்படுத்த ஊக்கமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.