நாதியற்றுப்போன நாடாண்ட சமூகம் எழுச்சிபெறட்டும்! வாழ்த்துச்செய்தியில் அ.காசிராஜன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை சார்பில் 2023-ஜனவரி'29-இல் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவில் "மக்களாட்சியில் இராஜகம்பளத்தார்" என்ற பெயரில் மலர் வெளியிடப்படுகிறது. சங்கத்தின் இம்முயற்சிக்கும், முப்பெரும் விழாவிற்கும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள செட்டிகுறிச்சி மு.ஊராட்சி மன்றத் தலைவரும், விருதுநகர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளருமான அ.காசிராஜன் கூறிருப்பதாவது,
அன்று நாடாண்ட சமுதாயம் இன்று நாடறியா சமுதாயமாக முடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் நாற்பது இலட்சம் மக்கள் தொகையுடன் பரந்து விரிந்துள்ள மாபெரும் சமுதாயம், வெளியுலகில் அறியா சமுதாயமாக மங்கி உள்ளது. சின்னஞ் சிறு சமுதாயமெல்லாம் அரசியல் வானில் சிறகடித்துப் பறக்கும்பொழுது, 18 மாவட்டங்களில் வாழும் சமுதாயம், வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் 234 மொத்த சட்டமன்ற தொகுதிகளில் 7-ல் ஒரு பங்கான 34 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் சமுதாயம், அரசியலில் முகவரியைத் தேடும் பரிதாப நிலையில் உள்ளது.
அரசியல் வாடை அறியாதோர் கூட, அரசியலில் மேடைக்கு மேடை ஜொலிக்கிறார்கள் எனில், அரியாசனம் கண்ட சமுதாயம் தற்போது அறியா ஜனமாக கூனி குறுகியுள்ளது. இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு "மக்களாட்சியில் இராஜகம்பளத்தார்" என்ற மலர் வெளியீடு நல்லதொரு முன்னெடுப்பாக இருக்கும் என்பதே என் போன்றோரின் கருத்து.
இந்நாள் வரை எவரும் சிந்தித்திராத இந்த நல்ல முயற்சியை முன்னெடுத்துள்ள சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு என் பாராட்டுக்கள்.
இம்மலர் வெளியீடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இவண்,
அ.காசிராஜன்,
விருதுநகர் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர், அதிமுக.