தமிழக அரசின் விருதை வென்றார் ஊராட்சி மன்றத் தலைவி!
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்தியதற்கான விருது கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு அவர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கௌரவித்துள்ளார்.
காலநிலை மாற்றம், வனம், சுற்றுச்சுழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட தனி நபர்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்போர் நலச்சங்கம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருதும், ரூபாய் ஒருலட்சம் பரிசும் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2021 இல் திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்றுக்கொண்டபின் செப்டம்பர் மாதம் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப்பேசிய அமைச்சர் மெய்யநாதன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முனைப்புடனும், முன்மாதிரியாகவும் செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு, ஒருகோடி ரூபாய் மதிப்பில் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படுமென்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்படும் 2022-ஆண்டுக்கான பசுமை முதன்மையாளர் விருதுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொத்தப்புள்ளி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கோடி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசுவிடம் வழங்கினார்.
பசுமை முதன்மையாளர் விருதுபெற்ற கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு அவர்கள் திமுக துணைப்பொதுச்செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பசுமை முதன்மையாளர் விருதுபெற்ற கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவருக்கு அம்மாவட்ட அதிகாரிகளும், சமுதாய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.