நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி வேந்தர் திரு.P.செந்தில்குமார்
திரு.P.செந்தில்குமார் அவர்கள் 07.03.1980-இல் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள குன்னத்தூரன்கடை கிராமத்தில் திரு.பொன்னுசாமி திருமதி.நாகம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் உள்ளூர் அரசுப்பள்ளியில் பத்தாவது வரை படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.கீதா என்ற மனைவியும், S.கௌசிகா, S.மதுமிதா, S.மோனிகா என்று மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.
பள்ளிப்படிப்பிற்குப்பின் பெருந்துறையிலுள்ள இன்ஃப்ரா டெக்ஸ் என்ற நிறுவனத்தில் 13 ஆண்டுகள் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு செந்தில் டெக்ஸ், கீதா டெக்ஸ் என்ற பெயரில் உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சுமார் 40 தொழிலாளர்களை தன் நிறுவனத்தில் பணியமர்த்தி வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறார்.
நடிகர் விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான திரு.P.செந்தில்குமார், 2004-ஆம் ஆண்டு விஜயகாந்த் தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய பொழுது அக்கட்சியில் இணைந்து சாதாரண தொண்டராக அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன் பின் சலங்கம்பாளையம் பேரூர் கழக செயலாளராக பத்தாண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது 2021-இல் திமுக-வில் இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
அரசியல்பணியுடன் சமுதாயப்பணியிலும் ஆர்வமுடைய திரு.செந்தில்குமார், விடுதலைக்களம் கட்சியில் நீண்ட காலமாக உறுப்பினராகவும், இரண்டாண்டுகள் தலைமை நிலையச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். விடுதலைக்களத்தின் சார்பில் பெருந்துறை, அந்தியூர் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட மாநாட்டுப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றியவர்.
இதனையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சலங்கபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் திமுக வேட்பாளராக முதல்முறையாக தேர்தல்களம் கண்டு பேரூராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுவாழ்வில் பதினைந்தாண்டு கால அனுபவம் மிக்கவரான திரு.செந்தில்குமார் புதிய பொறுப்பில் சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.