நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி வேந்தர்கள்-N.மகேந்திரன்
திரு.N.மாருசாமி (எ) மகேந்திரன் அவர்கள் 07.12.1985-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள எரப்பநாயக்கனூர் கிராமத்தில் திரு.நாகநாயக்கர் - திருமதி.சிம்மக்காள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.அம்சவதி என்ற மனைவியும், M.கிருத்திஷ் என்ற மகனும் உள்ளனர்.
பள்ளிப்படிப்பிற்குப் பின் விவசாயப்பணியில் ஈடுபட்ட திரு.மாருசாமி, சுயதொழில் முனைவராக விருப்பம் கொண்டு "நம்ம ஊரு சமையல் பேமிலி ரெஸ்டாரன்ட்" என்ற பெயரில் கவுந்தப்பாடி-ஈரோடு சாலையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கி கடந்த பத்து வருடங்களாக ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அரசியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 2010-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு சாதாரண தொண்டராக அரசியல் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே கடந்த பிரவரி மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பவானி சட்டமன்றத்திற்குட்பட்ட சலங்கபாளையம் பேரூராட்சி 13-வது வார்டில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் முதல்முறையாக தேர்தல் களம் கண்டு வெற்றிவாகை சூடியுள்ளார். அதையடுத்து நடைபெற்ற பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மயிரிலையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். சமுதாயத்தின் மீது அதிக பற்றுகொண்ட திரு.மாருசாமி பேரூராட்சி மன்ற உறுப்பினராக சிறப்புடன் பணியாற்றி தவறிவிட்ட வாய்ப்புகளுடன் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம்.