நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றி வேந்தர்! - திரு.S.P.ராஜாராம்
திரு.S.P.ராஜாராம் அவர்கள் 24.07.1962-இல் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள சக்கரபாளையம் கிராமத்தில் திரு.பழனியப்ப நாயக்கர் - திருமதி.முத்தம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். பெருநிழக்கிழார் குடும்பத்தில் பிறந்த திரு.ராஜாராம் அவர்கள் மேல்நிலைக்கல்வி வரை பயின்றுள்ளார். பிரமச்சாரியான திரு.இராஜாராம் அவர்கள் விவசாயத்தோடு முழுநேர அரசியல்வாதியாகவும் இருப்பவர்.
பாரம்பரிய திராவிட முன்னேற்றக் கழக குடும்பத்தைச் சேர்ந்தவரான திரு.இராஜாராம் 24-வது வயதில் திமுக-வில் அடிப்படையாக இணைந்தவர், கடந்த 15-ஆண்டுகளுக்கும் மேலாக கூகலூர் பேரூர் கழக செயலாளராக இருந்து வருகிறார். கட்சிப்பணிகளில் தீவிர ஈடுபாடு உடையவர், கட்சித் தலைமை அறிவித்த பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்களில் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் தொண்டர்கள் படையோடு கலந்துகொண்டு வருபவர்.
எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி காலத்தில்1986-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான கோபிச்செட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட கூகளூர் பேரூராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் மூலம் தனது முதல் அரசியல் வெற்றியை பதிவு செய்தார். அதுமுதல் தொடரும் வெற்றிமுகம் 1996-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று கூகலூர் பேரூராட்சி மன்ற துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான நிர்வாகத்தை வழங்கினார். 2006,2011 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் வெற்றிக்கனியை பறித்தார்.
தொடர் வெற்றிமுகம் காட்டும் திரு.இராஜாராம் அவர்கள் கடந்த பிப்ரவரி'19-இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 7-வது முறையாக கூகளூர் பேரூராட்சி 6-வது வார்டில் உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளராக களமிறங்கி மீண்டும் வெற்றியை தன்வசப்படுத்தினார். அரசியலில் தொடர் வெற்றி அனைவருக்கும் சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல. கட்டை பிரம்மச்சாரியான திரு.இராஜாராமை வெற்றிதேவதை முழுமையாக தழுவிக்கொண்டுள்ளதால், அரசியலில் அடுத்தடுத்த படிநிலைகளைக் கடந்து கம்பளத்தாரில் நீண்ட நாட்களாக இருக்கும் வெற்றிடத்தை நிரப்பி சமுதாய மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டி, தொடர் வெற்றிகள் வாழ்நாளெல்லாம் தொடரட்டும் என்று வாழ்த்துகிறோம்.