🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இன்று 100-வது பிறந்தநாள் கொண்டாடும் டி.எஸ்.சென்னா நாயக்கர்!

இன்று (27.07.2025) நூறாவது பிறந்தநாள் காணும் திமுக வின் மூத்த உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவருமான டி.எஸ்.சென்னா நாயக்கருக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான தோப்பு வெங்கடாச்சலம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசிபெற்றார். இதன் விவரம் வருமாறு,


ஈரோடு மாவட்டம் பாவானி ஒன்றியம் ஆலத்தூர் தட்டார்பாளையத்தைச் சேர்ந்தவர் திரு.டி.எஸ். சென்னா நாயக்கர். விவசாயத்தைப் பின்புலமாகக் கொண்ட சென்னா நாயக்கர் ஒரு மகன், நான்கு மகள்கள் மற்றும் பெயரன், பெயர்த்திகளுடன் சொந்த கிராமத்தில் வசித்துவருகிறார். இந்நிலையில் இன்று (27.07.2025) தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் பெரியவர் டி.எஸ்.சென்னா நாயக்கர்.

திமுகழகத்தின் மிக மூத்த முன்னோடியான திரு.சென்னா நாயக்கர் பவானி ஒன்றிய அவைத் தலைவர், ஆலத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். திரு.டி.எஸ். சென்னா நாயக்கரின் நூறாவது பிறந்தநாளையடுத்து ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள் சென்னா நாயக்கரை நேரில் சந்தித்து இனிப்பு ஊட்டி, சால்வை அணிவித்து,  காலில் விழுந்து ஆசிபெற்றார்.


தவிர, நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் திரு.டி.எஸ்.சென்னா நாயக்கரிடம் பவானி தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் கே.பி.துரைராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். அதேபோல் உள்ளூர் முக்கியப்பிரமுகர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சென்னா நாயக்கரிடம் ஆசிபெற்றனர். முன்னதாக ஆயிரம் பிறை தாண்டி நூற்றாண்டு காணும் டி.எஸ்.சென்னா நாயக்கரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் குடும்பத்தினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மிகமூத்த தலைவராக விளங்கும் திரு.டி.எஸ்.சென்னா நாயக்கர் அவர்கள் பூரண உடல்நலத்துடன் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து சமுதாயத்தை வழிநடத்தி ஆசிவதிக்க வேண்டுமாய் சமுதாய மக்கள் சார்பில் வேண்டுகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved