🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஆசிரியர் கல்யாணசுந்தரம், சகோதரர் மனைவி விபத்தில் மரணம் - ஆழ்ந்த இரங்கல்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், குலசேகரபட்டினம் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் கல்யாணசுந்தரம் (61), அவரது சகோதரர் ஜீவானந்தம் மனைவி ஆசிரியை பிரேமலதா (40).  கோவை வேளாண் கல்லூரியில் படித்துவரும் சகோதரர் ஜீவானந்தம் மகள் சுபத்ரா (19) வுக்கு கொரோனா விடுமுறை முடிந்து கல்லூரி நாளை திறக்கப்படுவதால் அவரை கல்லூரி விடுதியில் விடுவதற்காக இன்று காலை தேனியில் இருந்து சுபத்ரா மற்றும் அவரது தாயார் ஆசிரியை பிரேமலதா ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்றுகொண்டிருந்த  கார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது முன்னே சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயலும்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார்  தலை குப்புற கவிழ்ந்தது. 


இதில் ஆசிரியர் கல்யாணசுந்தரம், அவரது சகோதரர் மனைவி ஆசிரியை பிரேமலதா மற்றும் ஓட்டுனர் நாகராஜ் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கல்லூரி மாணவி சுபத்ரா பலத்த காயங்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சமுதாய அமைப்புகளுடன் நெருக்கமாகவும், அவ்வப்பொழுது தேவையான ஆலோசனைகளையும் வழங்கிவந்த  ஆசிரியர் கல்யாணசுந்தரம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே அவரும் சகோதரர் மனைவியும் இறந்ததது பேரதிர்ச்சியாக உள்ளது. அன்னாரின் இறப்பு சமுதாயத்திற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அன்பு மகள் சுபத்ரா விரைவில் நலம் பெற வேண்டுமாய் இயற்கையை வேண்டுவோம். 


திராவிட இயக்க சிந்தனையாளர் கல்யாணசுந்தரம் மற்றும்பிரேமலதா ஆகியோரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved